நாட்டையே அதிரவைத்த ‘மணி மியூல்’ சைபர் மோசடி.. தமிழகம் முழுவதும் 800 பேர் கைது!!
நாட்டையே உலுக்கிய 'மணி மியூல்' வங்கி கணக்கு சைபர் மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் போலீசார் நடத்திய 2 நாள் அதிரடி சோதனையில் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வங்கி கணக்குகளைக் கமிஷன் ஆசை காட்டிப் பயன்படுத்தி வந்த கும்பலைக் குறிவைத்து இச்சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, ஆகஸ்ட் 09: ஆன்லைன் டிரேடிங், டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சைபர் குற்றவாளிகள் தங்களைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் மறைப்பதற்கும், மோசடிப் பணத்தைப் கைமாற்றுவதற்கும் பொதுமக்களின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தும் ‘மணி மியூல்’ முறையைக் கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி வலைப்பின்னலை முற்றிலும் அறுக்கும் வகையில், தமிழக சைபர் கிரைம் போலீசார் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து தமிழகம் முழுவதும் 2 நாட்கள் தீவிர சிறப்புச் சோதனையை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: பொதுமக்கள் வியக்கும் வகையில் பொங்கல் பரிசு காத்திருக்கிறது.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!!
‘மணி மியூல்’ மோசடி இயங்கும் முறை:
சைபர் குற்றவாளிகள் நேரடியாகத் தங்களின் சொந்த வங்கி கணக்குகளைப் பயன்படுத்தாமல், பொதுமக்களின் கணக்குகளை கமிஷன் தொகை தருவதாக ஆசை காட்டியோ அல்லது ஏமாற்றியோ பெறுகின்றனர். ஆன்லைன் டிரேடிங் மற்றும் போலியான டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பறிக்கப்படும் மோசடிப் பணம், முதலில் இந்த ‘மணி மியூல்’ வங்கி கணக்குகளில் தான் வந்து விழுகிறது. போலீசார் தங்களைக் நெருங்காமல் இருக்க, அப்பணத்தை உடனடியாக அடுத்தடுத்து 10 முதல் 15 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்குச் சைபர் குற்றவாளிகள் மாற்றி விடுவார்கள். இதனால் குற்றவாளிகளைக் கண்டறிவதில் போலீசாருக்குப் பெரும் சிரமமும் சிக்கலும் நீடித்து வந்தது.
2 நாட்கள் நடத்தப்பட்ட அதிரடி சோதனை:
டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் ஆன்லைன் மோசடிகள் குறித்துத் தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, இந்த மணி மியூல் வங்கி கணக்குகளே விசாரணைக்கு முதன்மைத் தடையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் நடத்திய சோதனையில் 205 பேர் கைதாயினர். ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தவெகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. மேலும் 27 புதிய மாவட்ட அமைப்புகள் உருவாக்கம்.. புதிய மா.செக்கள் நியமனம்!!
கமிஷன் ஆசை காட்டி மோசடி – எச்சரிக்கை:
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டுத் தங்களது வங்கி கணக்குகளைச் சைபர் குற்றவாளிகளுக்குப் பயன்படுத்தக் கொடுத்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தீவிரக் குற்றப்பின்னணி இல்லாத சிலருக்குக் காவல் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்குகளை கமிஷனுக்காக பிறரிடம் ஒப்படைப்பதும் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதே ஆகும் என்பதால், பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்கு விபரங்கள், ஓடிபி (OTP) மற்றும் கடவுச்சொற்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.