அன்பில் மகேஷ் இல்லத்தில் ரெய்டு.. “மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பழிவாங்கல் நடவடிக்கை”.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
MK Stalin Condemns: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவலத்துறை நடத்தி வரும் சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, செப்டம்பர் 16: தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவலத்துறை சார்பில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே நடைபெற்று வரும் இந்த ரெய்டு நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சோதனையானது அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்றும், மாநிலத்தில் நிலவும் பல்வேறு தீவிரமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இது நிகழ்த்தப்படுகிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
மாநிலத்தை உலுக்கும் தொடர் மக்கள் பிரச்சினைகள்:
தமிழகம் முழுவதும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலும், பட்டினம்பாக்கத்தில் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டமும் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுக்கு உரிய பதிலைக் கோரி தலைமைச் செயலகத்தின் முன் போராட்டம் நடத்துவது, ஆவின் பால் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பரிதவிப்பது, ராமநாதபுரத்தில் நடைபெற்ற இரட்டைக்கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அரசு பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி அத்துமீறியது என மாநிலத்தையே உலுக்கி வரும் பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
தோல்விகளை மறைக்க ரெய்டு அஸ்திரமா?
இத்தகைய சூழலில், மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் லண்டனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார். மக்களின் கோபத்தையும், ஆட்சியின் தோல்விகளையும் மறைக்கவும், இந்த விவகாரங்களைச் சரி செய்ய முடியாத விரக்தியிலும் த.வெ.க. அரசு மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறது. அதன் விளைவாகவே திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ‘ரெய்டு’ எனும் அஸ்திரத்தை ஏவியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்க : தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு.. தன்னிச்சையாக உயர்த்திய உரிமையாளர்கள்.. பயணிகள் அதிர்ச்சி!
சட்டரீதியாக எதிர்கொள்வோம்:
மேலும், எதிர்க் கட்சிகள் மீது தொடர்ச்சியாக இதுபோன்ற சோதனைகளை நடத்துவதன் மூலம் மக்கள் மனதிலிருக்கும் கோபத்தை ஒருபோதும் தணிக்க முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் சட்டத்தின் முன் ஒருபோதும் நிலைத்து நிற்காது என்பதை த.வெ.க. அரசு விரைவிலேயே உணரும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கையை திமுக சட்டரீதியாக உறுதியுடன் எதிர்கொள்ளும் என்றும் தனது கண்டனப் பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.