ரூ.100 கோடி மோசடி? முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு
Corruption Case Against Anbil Mahesh : முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது, 177 தனியார் பள்ளி உரிமையாளர்கள் அளித்த புகாரில் ஊழல் தடுப்புப்பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ரூ.100 கோடி மோசடி என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 16 : முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது, 177 தனியார் பள்ளி உரிமையாளர்கள் அளித்த புகாரில் ஊழல் தடுப்புப்பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ரூ.100 கோடி மோசடி என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செப்டம்பர் 16, 2026 இன்று காலை முதல் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தர லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை, திருச்சியில் 6 இடங்களில் சோதனையிட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய குற்றப்பிரி சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அலுவலகத்துக்கு சோதனைக்காக வந்த போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்திருக்கிறது. இதனையடுத்து அலுவலகம் முன்பு காத்திருந்த மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் பூட்டை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் திருச்சியிலுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை காரணமாக அவரது வீட்டின் முன் திமுகவினர் குவிந்து வருகின்றனர். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கும், அன்பில் மகேஷின் வழக்கறிஞருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல்…
— M.K.Stalin (@mkstalin) September 16, 2026
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தவெக அரசு வேண்டுமென்றே திமுகவில் சிறப்பாக செயல்படும் நபர்களை குறிவைத்து, பயமுறுத்தும் விதத்தில் ரெய்டு செய்கிறார்கள். எல்லா ரெய்டுகளையும் எதிர்கொண்டு, நீதிமன்றம் மூலமாகக் குற்றமற்றவர் என நிரூபித்து நாங்கள் வெளியே வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கைதான் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும் என்று தெரிவித்தார்.