மதுரை அருகே கோர விபத்து.. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!
சென்னை பாடிகுப்பத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மதுரைக்குக் காரில் வந்தபோது, மேலூர் தும்பைப்பட்டி அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்கக் காரைத் திருப்பியதில், தடுப்புச் சுவரைத் தாண்டி எதிரே வந்த கார் மீது மோதி குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரை, ஆகஸ்ட் 03: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தைக் காப்பாற்ற முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டி எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியதில், பிஞ்சு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!
சென்னை குடும்பத்திற்கு நேர்ந்த பெருந்துயரம்:
சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிப்பதற்காகக் காரில் மதுரை நோக்கிப் புறப்பட்டு வந்துள்ளார். கார் மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைப்பட்டி கிராமத்தின் அருகே உள்ள நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாகச் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது. அதன் மீது கார் மோதிவிடக் கூடாது என்பதற்காக, காரை ஓட்டி வந்த ஸ்ரீராம் அதிவேகத்தில் காரை வலதுபுறமாகத் திருப்பியுள்ளார்.
தடுப்புச் சுவரைத் தாண்டி மோதல்:
காரை அதிவேகமாகத் திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார், சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மையத் தடுப்புச் சுவரை பலமாக மோதித் தாண்டிப் பாய்ந்தது. அதேநேரத்தில், மதுரையிலிருந்து திருச்சி நோக்கி எதிர்திசையில் வந்துகொண்டிருந்த மற்றொரு கார் மீது ஸ்ரீராமின் கார் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தில் இரண்டு கார்களும் நொறுங்கிப் பலத்த சேதமடைந்தன.
4 பேர் சம்பவ இடத்திலேயே பலி:
இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த ஸ்ரீராம், அவரது மனைவி ரக்சனா, அவர்களின் கைக்குழந்தை பிரனிதா மற்றும் உறவினர் ராஜகுமாரி ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கார்களில் பயணித்த மற்ற 3 பேர் படுகாயமடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை:
விபத்து குறித்துத் தகவலறிந்த மதுரை மாவட்டம் மேலூர் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கார்களின் இடிபாடுகளை அகற்றி, படுகாயமடைந்த 3 பேரை மீட்டு உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : கர்நாடகா கபினி அணையில் நீர் திறப்பு 25,000 கன அடியாக அதிகரிப்பு.. தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு!!
உயிரிழந்த 4 பேரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தின் காரணமாக மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். இச்சம்பவம் குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.