ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம்… மக்கள் குறைகளை கேட்டறிந்த சார்-ஆட்சியர்!
Jamabandi Meeting : தென்காசி மாவட்டத்தில் அனைத்து வட்டத்திலும் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3- ஆவது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1435- ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி) கடந்த ஜூன் 17- ஆம் தேதி ( புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 19) 3- ஆவது நாளாக ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது. இதில், ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தென்காசி சார் – ஆட்சியர் வைஷ்ணவி பால் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில், புதுப்பட்டி குறு வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்களின் கிராம கணக்குகள் ஆகியவை தணிக்கை செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 25 மனுக்களை சார்- ஆட்சியர் வைஷ்ணவி பால் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, இந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பல்வேறு வட்டங்களில் ஜமாபந்தி கூட்டம்
இந்த கூட்டத்தில், ஆலங்குளம் தாசில்தார் எம். பரமசிவன், சார்- ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருக செல்வி, துணை தாசில்தார்கள் அருள்ராஜ், சங்கரவேலு, புதுப்பட்டி வருவாய் ஆய்வாளர் கடல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல, தென்காசியில் சப் கலெக்டர் தலைமையிலும், சிவகிரி வட்டத்தில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், வீரகேரளம்புதூர் வட்டத்தில் உதவியாளர் ( கலால்) தலைமையிலும், செங்கோட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது) தலைமையிலும் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க : சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்.. வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை.. 3 பேர் கைது!!




பட்டா மாறுதல்- குடும்ப அட்டை தொடர்பாக…
இந்த கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகள், வாரிசு சான்று பெறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, இதர அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று அதன் மீது உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன. இது மட்டும் இன்றி கிராமப்புற நில வரி வருவாயை ஆண்டுக்கு ஒரு முறை இந்த கூட்டத்தில் கணக்கிடப்பட்டுகிறது.
பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு ஜமாபந்தி கூட்டத்தின் போதே அந்த மனுக்களுக்கு தீர்வு வழங்குவது அல்லது உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் பரபரப்பு.. ஓடும் ரயிலை நிறுத்தி துணிகர கொள்ளை.. போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன்..