சென்னையில் பரபரப்பு.. ஓடும் ரயிலை நிறுத்தி துணிகர கொள்ளை.. போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன்..
அப்போது, அங்கு சிக்னல் கோளாறு ஏதும் ஏற்படவில்லை என்பதும், மர்ம நபர்கள் பச்சை சிக்னல் விளக்கை ஒரு துணியால் மறைத்து, ரயிலை செயற்கையாக நிறுத்தச் செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிக்னல் தெரியாததால் ரயிலை ஓட்டுநர் மெதுவாக இயக்கி நிறுத்திய சமயத்தில், இந்த துணிகர கொள்ளை அரங்கேறியுள்ளது.
சென்னை, ஜுன் 19: சென்னையில் ரயில் சிக்னலை துணியால் மறைத்து, ரயிலை நூதன முறையில் நிறுத்திக் பயணிகளிடம் கொள்ளையடித்த துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை காட்டாங்குளத்தூர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென நின்றது. ரயில் மெதுவாகச் சென்று நின்ற அந்த நேரத்தில், மர்ம நபர் ஒருவர் ரயிலுக்குள் புகுந்து, அங்கு பயணித்த பெண் ஒருவரிடமிருந்து நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார். பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிட்டு, ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வருவதற்குள் கொள்ளையன் தப்பிச் சென்றான்.
இதையும் படிக்க: சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்.. வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை.. 3 பேர் கைது!!
அதிர்ச்சியூட்டும் ரயில்வே விசாரணை:
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணையைத் தொடங்கினர். வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காத அந்தப் பகுதியில், அன்று இரவு ஏன் நெல்லை எக்ஸ்பிரஸ் நின்றது என்ற கோணத்தில் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து போலீசார் தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு சிக்னல் கோளாறு ஏதும் ஏற்படவில்லை என்பதும், மர்ம நபர்கள் பச்சை சிக்னல் விளக்கை ஒரு துணியால் மறைத்து, ரயிலை செயற்கையாக நிறுத்தச் செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிக்னல் தெரியாததால் ரயிலை ஓட்டுநர் மெதுவாக இயக்கி நிறுத்திய சமயத்தில், இந்த துணிகர கொள்ளை அரங்கேறியுள்ளது.
பகலில் ஆட்டோ ஓட்டுநர், இரவில் கொள்ளையன்:
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், குமரேசன் பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து கொண்டு, இரவு நேரங்களில் இதுபோன்ற ரயில் சிக்னல்களை துணியால் மறைத்து ரயில்களை நிறுத்தி, பெண்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிக்க: தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!
அதிரடியாக கைது செய்த போலீஸ்:
இவர் மீது ஏற்கனவே 6 வழிப்பறி வழக்குகள் இருப்பதும், இதற்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது குமரேசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் அவருடன் வேறு ஏதேனும் கும்பலுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தாம்பரம் ரயில்வே போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்னலை மறைத்து ரயிலை நிறுத்தி கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.