கோவில் டெண்டர்களில் அதிரடி மாற்றங்கள்.. இனி அனைத்தும் ஆன்லைன்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி!!
HR&CE Temple Tender Guidelines: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் டெண்டர்களும் இனி ஆன்லைன் மூலமே நடைபெறும் என்றும், கோயில் கடைகளில் POS இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பில் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை 30: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் டெண்டர் வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கிய மற்றும் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதாகத் துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். பெருமுதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்காமல், சிறு வணிகர்கள் உட்பட அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதையும், தரத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு?
ஒரே மாதிரியான விண்ணப்பங்கள்:
அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள், அறநிலையத் துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களின் டெண்டர்களுக்கான ஒப்பந்தப் புள்ளி கோருதலும், ஏல நடைமுறைகளும் இனி முழுமையாக ஆன்லைன் வழியிலேயே நடைபெறும். மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பப் படிவங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே சீரான இ.எம்.டி வைப்புத் தொகை:
இதுவரை கோயில் வாரியாக மாறுபட்டு வந்த இ.எம்.டி வைப்புத் தொகை இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக 1% இ.எம்.டி மற்றும் 5% செக்யூரிட்டி வைப்புத் தொகை எனக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பான் எண்கள் இல்லாத ஒப்பந்ததாரர்கள் எந்தவொரு டெண்டரிலும் பங்கேற்க முடியாது.
முறையிலும், கடைகளிலும் மாற்றம்:
மிகக் குறைந்த விலையை நிர்ணயிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக டெண்டர் வழங்கி விடாமல், மேலும் குறைந்த விலையை நிர்ணயிக்க அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், ஒரே நபருக்கு ஒட்டுமொத்தக் ஒப்பந்தத்தையும் தராமல் இரண்டு அல்லது மூன்று பேருக்குப் பிரித்து வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது. தரமற்ற பொருட்கள் வழங்குதல், காலதாமதம் செய்தல் அல்லது சப்ளை செய்யத் தவறுதல் போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படும்.
மொட்டை அடிக்கும் டெண்டர் எடுத்தவர்கள் தினசரி எவ்வளவு முடி சேகரிக்கிறார்கள், என்ன எடையில் எடுக்கிறார்கள் என்பதை முழுமையாகக் கண்காணிக்கும் புதிய கண்காணிப்பு முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பில் கட்டாயம்:
கோயில் வளாகங்களில் இயங்கும் கடைகள் மற்றும் பார்க்கிங் வசதிகளில் நடக்கும் அநியாயக் கட்டண வசூலைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகக் கடைகளில் இனி கைகளால் பில் போடும் முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்துக் கடைகளிலும் கட்டாயமாக POS இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பில் மட்டுமே அச்சிட்டு வழங்க வேண்டும்.
இதையும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!
பார்க்கிங் கட்டணக் கட்டுப்பாடு:
ஒவ்வொரு கோயிலிலும் பார்க்கிங் கட்டணம் வெவ்வேறு விதமாக ரூ.100, ரூ.200 என உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுவதாக வரும் புகார்களைத் தடுக்க, பார்க்கிங் கட்டணங்களுக்கும் டிஜிட்டல் பில்லிங் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் கோயில்களுக்குத் தேவையான பொருட்கள் குறைந்த விலையில் தரமாகப் பெறப்படுவதோடு, பக்தர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதும் முற்றிலும் தடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.