Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெருங்கும் காதலர் தினம்…காத்திருக்கும் காதலர்கள்…சூடுபிடிக்க தொடங்கியது ஓசூர் ரோஜா பூக்கள் விற்பனை!

Valentine Day : நெருங்கி வரும் காதலர் தினத்தை முன்னிட்டு ஒசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பல்வேறு வகையான ரோஜா பூக்களின் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. மேலும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

நெருங்கும் காதலர் தினம்…காத்திருக்கும் காதலர்கள்…சூடுபிடிக்க தொடங்கியது ஓசூர் ரோஜா பூக்கள் விற்பனை!
காதலர் தினத்துக்காக ரோஜா பூக்கள் விற்பனை அமோகம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 09 Feb 2026 14:17 PM IST

உலகம் முழுவதும் வருகிற பிப்ரவரி 14- ஆம் தேதி ( சனிக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினம் என்றாலே அனைவரது மனதிலும் உதிக்கும் முதல் எண்ணம் ரோஜா பூவாகும். அந்த அளவுக்கு ரோஜா பூவானது அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. காதலர் தினத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், காதலர் தினத்தன்று முக்கிய இடம் பிடிக்கும் ரோஜா பூ விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு, தாஜ்மஹால் ( அடர் சிவப்பு) நோப்ளாஸ், சவரன், கோல்ட் ஸ்டிரைக், பெர்னியர், அவலஞ்சர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா செடிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

களை கட்டிய ஒசூர் ரோஜா விற்பனை

ஆண்டுதோறும் காதலர் தினம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் போது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ரோஜா ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஓசூர் ரோஜா பூவுக்கு வரவேற்பு குறைந்தது. மேலும், விமான கட்டண உயர்வு காரணமாக விவசாயிகள் ஏற்றுமதியை தவிர்த்து, உள்நாட்டு விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் பகுதி ரோஜாவுக்கான உள்நாட்டு வர்த்தகம் களை கட்டத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: Viral Video : கொட்டும் வெள்ளை பனியில் திருமணம்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

வெளிமாநிலங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு

குறிப்பாக, டெல்லி, மும்பை, கேரளா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நகரங்களுக்கு ஆன்லைன் மூலமாக ரோஜா பூ விற்பனைக்கான முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம், தினமும் பல்வேறு மாநிலங்களுக்கு சுமார் 10 லட்சம் ரோஜா பூக்களை விவசாயிகள் அனுப்பி வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ரோஜா உற்பத்தியாளர்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக ரோஜா பூக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

ரோஜை பூ கட்டு ரூ.800 வரை விற்பனை

தற்போது, ரோஜா பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், ரோஜா பூக்களுக்கான சாகுபடி பரப்பு குறைந்ததால் உற்பத்தியும் குறைந்துள்ளது. வழக்கமான நாட்களில் 20 ரோஜா பூக்கள் கொண்ட கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாததாகும். உள்ளாட்டு வர்த்தகத்துக்கு தினந்தோறும் சுமார் 2 லட்சம் ரோஜா மலர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது, தினந்தோறும் சுமார் 10 லட்சம் மலர்களை அனுப்பி வருகிறோம். குறிப்பாக, தாஜ்மஹால் ரோஜாவுக்கு 80 சதவீதம் ஆர்டர்கள் கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க: Viral Video : இன்ஸ்டண்ட் சாம்பார்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!