தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்.. அடுத்தடுத்து அதிரடி ட்விஸ்ட்!
அதேபோல், கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம் அணியினர், பின்னர் அது சரிவராத காரணத்தினால் வேறு வழியின்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சுமூகமாக சென்றுவிட்டனர். எனினும், அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது நிலைப்பாட்டை தற்போது வரை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அதேபோல், சி.வி.சண்முகமும் தற்போது வரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
சென்னை, ஜுன் 06: தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது தாய் கட்சியிலிருந்து விலகி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இதில் அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய கடம்பூர் ராஜு போன்ற மூத்த தலைவர்கள் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ஜூன் 18 முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது.. ஆளுநர் உரையுடன் தொடக்கம்!!
அதிமுகவில் நிலவும் அதிருப்தி:
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அதிமுக தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. குறிப்பாக, தேர்தலின் போது கட்சியை அவர் முழுமையாக சரியாக வழிநடத்தவில்லை என்றும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற மற்றும் விலகிச் சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டிருந்தால் இந்த அளவுக்குப் பாரிய தோல்வி ஏற்பட்டிருக்காது என்றும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
முக்கிய நிர்வாகிகளை இழக்கும் அதிமுக:
இந்த உட்கட்சி அதிருப்தியின் காரணமாக, கடந்த சில நாட்களாகவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூட தவெக-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, அக்கட்சியில் இணைந்து வந்தனர். அதேபோல், கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம் அணியினர், பின்னர் அது சரிவராத காரணத்தினால் வேறு வழியின்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சுமூகமாக சென்றுவிட்டனர். எனினும், அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது நிலைப்பாட்டை தற்போது வரை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அதேபோல், சி.வி.சண்முகமும் தற்போது வரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
பனையூரில் இன்று இணைப்பு விழா:
இதன் தொடர்ச்சியாக, தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து தவெக-வில் இணையத் தயாராகி வருகின்றனர். அதன்படி, இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் பிரம்மாண்டமான முறையில் இந்த இணைப்பு விழா நடைபெற உள்ளது. இதில் அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த எம்.சி. சம்பத் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணையவுள்ளனர்.
மேலும் படிக்க: “தவறு செய்தால் கடும் நடவடிக்கை!”.. முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!
மேலும் பலர் இணைய வாய்ப்பு:
இவர்கள் மூவர் மட்டுமல்லாமல் மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அதிமுகவிலிருந்து விலகி நாளை தவெக-வில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் முழு விவரங்கள் நாளை இணைப்பு விழாவின் போது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.