இட்லி தட்டில் சிக்கிய விரல்.. வலியால் துடித்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!
4 Years Old Boy Fingers Stuck In Idli Plate | சென்னை தாம்பரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், இட்லி தட்டில் விரலை விட்டு சிக்கிக்கொண்டுள்ளார். இந்த நிலையில், சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் விரல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன் 15 : சென்னை (Chennai) தாம்பரத்தில் இட்லி தட்டில் கை விரல் சிக்கி தவித்த 4 வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், இட்லி தட்டில் விரலை விட்டதன் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து சிறுவனை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலம்.
சென்னையில் இட்லி தட்டில் விரல் சிக்கிக்கொண்ட சிறுவன்
சென்னை, தாம்பரத்தை அடுத்த திருநீர் மலை சிவராஜ் தெருவில் வசிப்பவர் திலகராஜ். இவருக்கு 4 வயதில் சித்தார்த் என்ற மகன் உள்ளார். அவர் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இட்லி தட்டை எடுத்து விளையாடிய சிறுவன், தெரியாமல் அதில் இருந்த துளையில் விரலை விட்டுள்ளார். அது சிறிய துளை என்பதால் சிறுவனின் விரல் நன்றாக சிக்கிக்கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறுவன் வலியால் அலறி துடித்துள்ளார்.
இதையும் படிங்க : கோவையில் கைதியை தப்பிக்க உதவிய காவலர் உட்பட 2 பேர் கைது – 2 காவலர்கள் சஸ்பெண்ட்




தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த பெற்றோர்
சிறுவன் அலறி துடிப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர். இந்த நிலையில் தான், அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் இரும்பை வெட்டும் கருவியால் சுமார் ஒரு மணி நேரம் மிகவும் பாதுகாப்பாக இட்லி தட்டை வெட்டி, சிறுவனின் விரலை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க : பள்ளிகளில் சாதிக் கயிறு – அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்
தீயணைப்பு வீரர்கள் துரிதமாகவும், கவனமாகவும் செயல்பட்டதன் காரணமாக சிறுவனின் விரலில் எந்த வித காயங்களும் ஏற்படாமல் அவர் மீட்கப்பட்டுள்ளார். இட்லி தட்டின் துளைக்குள் விரலை விட்டு சில மணி நேரம் வலியால் துடித்துக்கொண்டு இருந்த சிறுவனை பத்திரமாக மீட்டதன் காரணமாக தீயணைப்பு துறையினருக்கு சிறுவனின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.