“உன் அப்பன் சாகுறத பாரு”.. மகள் கண் முன்னே துடிதுடிக்க கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்!!
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குடவாசல் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமுருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த சுதா, தீவிர சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த ஆறு பேர் கொண்ட போதை கும்பல், மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் கண் முன்னேயே தந்தையைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ள பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காளிபுரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (48). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி சுதா, மகன் சுமன் மற்றும் மகள் யாசின் ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து திருமுருகன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை நேரத்தில், இவர்களது வீட்டின் வெளிப்பக்கக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த திருமுருகன் எழுந்து வந்து உள்பக்கக் கதவைத் திறப்பதற்குள், மது போதையில் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வெளிப்பக்கக் கதவை உடைத்துக் கொண்டு, அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.
இதையும் படிக்க: வடலூரில் பெண் கொடூர கொலை.. மீன் வியாபாரி அதிரடி கைது.. எஸ்பி பரபரப்பு தகவல்!
மகள் கண் முன்னே கொடூரம்:
வீட்டிற்குள் நுழைந்த அக்கும்பல், திருமுருகனைச் சரமாரியாக வெட்டத் தொடங்கியது. கணவரைக் காப்பாற்ற ஓடிவந்த மனைவி சுதாவையும் அந்த கும்பல் கொடூரமாக வெட்டியது. அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த இவர்களது மகன் சுமனையும் அக்கும்பல் கடுமையாகத் தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.
இதற்கிடையில், திருமுருகனின் மகள் யாசினின் கழுத்தில் அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் கத்தியை வைத்து, “சத்தம் போடக்கூடாது.. உன்னுடைய அப்பன் வெட்டப்பட்டுச் சாவதை நேரில் பார்” என்று கூறி தொடர்ச்சியாக மிரட்டியுள்ளான். யாசின் கண் முன்னேயே திருமுருகன் கொடூரமாக வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அக்கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த மூன்று இருசக்கர வாகனங்களில் ஏறி அங்கிருந்து தப்பியோடியது.
சாலை மறியல் போராட்டம்:
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குடவாசல் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமுருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த சுதா, தீவிர சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரக் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த திருமுருகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள புதுக்குடி என்ற இடத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
காவல் துறை விசாரணை:
போராட்டம் நீடித்ததைத் தொடர்ந்து, திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் தனிப்படை அமைத்துக் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதையும் படிக்க: பொது மக்களை அரிவாளால் வெட்டிய கும்பல்.. தென்காசி – நெல்லையில் போலீசார் அதிரடி வேட்டை.. சுட்டு பிடிக்க உத்தரவு?
இக்கொலைச் சம்பவம் தொழில் போட்டி காரணமாக நடந்ததா அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற பல கோணங்களில் குடவாசல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கச் சேங்காளிபுரம் பகுதியில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.