வடலூரில் பெண் கொடூர கொலை.. மீன் வியாபாரி அதிரடி கைது.. எஸ்பி பரபரப்பு தகவல்!
மண் குவியலுக்கு அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல், மண்ணில் புதைந்த நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பொதுமக்கள் உடனடியாக வடலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
வடலூர் அருகே மஞ்சுலா என்ற பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு பள்ளத்தில் புதைக்கப்பட்ட சம்பவத்தில், அவருடன் தொடர்பிலிருந்த மீன் வியாபாரி சம்பத்குமார் என்பவரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வடலூரிலிருந்து நெய்வேலி செல்லும் சாலையில் ‘கண்ணுத்தோப்பு’ என்ற இடம் அமைந்துள்ளது. அப்பகுதியில் தற்போது புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், சாலையின் ஓரத்தில் அதிக அளவில் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த மண் குவியலுக்கு அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் உடல், மண்ணில் புதைந்த நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பொதுமக்கள் உடனடியாக வடலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : தமிழ்நாடு தாங்காது “சிஎம் சார்”… சட்டம் – ஒழுங்கு குறித்து உதயநிதி காட்டமான விமர்சனம்!
போலீசார் தீவிர விசாரணை:
தகவலின் பேரில் நெய்வேலி டிஎஸ்பி (DSP) ராதாகிருஷ்ணன் மற்றும் வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். முதற்கட்ட ஆய்வில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத யாரோ மர்ம நபர்கள் அந்தப் பெண்ணை வேறு எங்கிருந்தோ கடத்தி வந்து, கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் மஞ்சுலா என்று தெரியவந்தது. தொடர்ந்து, அவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலைக்கான பின்னணி:
இதனிடையே, குற்றத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சம்பத்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சேப்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மீன் வியாபாரம் செய்து வருபவர் என்றும் கடலூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மஞ்சுலாவிற்கும், கைது செய்யப்பட்டுள்ள மீன் வியாபாரி சம்பத்குமாருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாகத் தனிப்பட்ட தொடர்பு இருந்து வந்தது உறுதியாகியுள்ளது.
நள்ளிரவில் நடந்த கொடூரம்:
சம்பவத்தன்று, சென்னைக்குச் சென்றிருந்த மஞ்சுலா, அங்கிருந்து பேருந்து மூலம் புறப்பட்டு இரவு சுமார் 9 மணியளவில் கோடியனூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். இரவு நேரத்தில் அங்கு வந்த அவரை, சம்பத்குமார் தனது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், வடலூரில் சம்பவ நடந்த இடத்தில் வைத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. வாக்குவாதத்தின் உச்சக்கட்ட ஆத்திரத்தில், சம்பத்குமார் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மஞ்சுலாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், ஆதாரங்களை மறைக்கும் நோக்கில், அங்கிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இருந்த பள்ளத்தில் மஞ்சுலாவின் உடலைத் தள்ளி, மண்ணைப் போட்டு மூடிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இதையும் படிக்க: பொது மக்களை அரிவாளால் வெட்டிய கும்பல்.. தென்காசி – நெல்லையில் போலீசார் அதிரடி வேட்டை.. சுட்டு பிடிக்க உத்தரவு?
குற்றவாளி ஒப்புதல்:
மறுநாள் காலையில் இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றினர். எஸ்பி-யின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் குற்றவாளி சம்பத்குமார் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். காவல் துறை விசாரணையில் அவர் தனது குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என எஸ்பி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.