சென்னை எழும்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகள்.. தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் விரைவு ரயில்கள்…
ஆகஸ்ட் மாதம் முதல் தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், மங்களூர் சென்ட்ரல் விரைவு ரயில், கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் மற்றும் சேலம் விரைவு ரயில் ஆகியவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31, 2026: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளின் காரணமாக, அங்கிருந்து புறப்படும் பல்வேறு விரைவு ரயில்கள் தற்காலிகமாக சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகின்றன. மேலும், ஒரு சில ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்கள் இயக்கப்படும் மையமாகக் கருதப்படுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், தற்போதைய பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. மறுசீரமைப்புப் பணிகளால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சில ரயில் சேவைகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..
தற்போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.840 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது, புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்படாமல் இருக்கவும், ரயில் இயக்கத்தை சீராக மேற்கொள்ளவும் சில விரைவு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் விரைவு ரயில்கள்:
அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், மங்களூர் சென்ட்ரல் விரைவு ரயில், கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் மற்றும் சேலம் விரைவு ரயில் ஆகியவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாம்பலம் வரை இயக்கப்படும் ரயில்கள்:
அதேபோல், திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். பின்னர், அங்கிருந்து மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முந்தைய திமுக அரசின் ‘தாயுமானவர்’ திட்டம் பெயரை மாற்றிய தவெக அரசு!!
மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, பயணிகள் எழும்பூர் ரயில் நிலையத்திற்குப் பதிலாக தாம்பரம் அல்லது மாம்பலம் ரயில் நிலையங்களை பயன்படுத்தி தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.