திமுகவில் அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசியலில் கனிமொழி?.. மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
Drastic Changes in the DMK: சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய கட்சித் தலைமை ஏற்கனவே 38 பேர் கொண்ட பிரத்யேகக் குழுவை அமைத்திருந்தது. இக்குழுவினர் நேற்று முதல் நேரடியாகக் களமிறங்கி, தொகுதி வாரியாகத் தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்கியுள்ளனர்.
சென்னை, மே 19: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் உட்கட்சி மாற்றங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கியக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்த பல அதிரடி முடிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி மற்றும் திமுகவில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் குறித்த விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. ஆதாரங்களுடன் விசாரணைக்கு அனுமதி கோரிய ED.. தவெக அரசின் முடிவு என்ன?
ஆலோசனையில் முக்கிய நிர்வாகிகள்:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மிக முக்கிய மாநில நிர்வாகிகள் பங்கெடுத்துள்ளனர். குறிப்பாக கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் முதன்மையாகப் பங்கேற்று, தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து விவாதித்து வருகின்றனர்.
காரணங்களை ஆராயும் 38 பேர் கொண்ட குழு:
சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த வீழ்ச்சிக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய கட்சித் தலைமை ஏற்கனவே 38 பேர் கொண்ட பிரத்யேகக் குழுவை அமைத்திருந்தது. இக்குழுவினர் நேற்று முதல் நேரடியாகக் களமிறங்கி, தொகுதி வாரியாகத் தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். இந்தத் தோல்விப் புலனாய்வுக் குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை வரும் ஜூன் 5-ஆம் தேதி கட்சித் தலைமையிடம் முறைப்படி தாக்கல் செய்ய உள்ளனர்.
புதிய குரல்களும், வாரிசுப் பொறுப்புகளும்:
தோல்வி ஆராய்ச்சி குழுவின் அறிக்கை ஒருபுறம் இருக்க, கட்சியை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது. இதற்கிடையே, கட்சிக்குள்ளிருந்து இருவேறு முக்கியக் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற அரசியலைக் காட்டிலும், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இனிவரும் காலங்களில் தமிழக மாநில அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதுகுறித்த சாத்தியக்கூறுகள் இந்த ஆலோசனையில் பேசப்படுவதாகத் தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பு:
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக கட்சி அமைப்பில் மேலும் ஒரு மிக முக்கிய உயர் பொறுப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. பொதுச்செயலாளர் பதவியில் தொடங்கி, அடிமட்ட அளவில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் பதவி வரை என்ன மாதிரியான அதிரடி மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பது குறித்தே மு.க.ஸ்டாலின் தற்போது தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார். தேர்தல் பணியில் சுணக்கம் காட்டிய மற்றும் தோல்விக்குக் காரணமான மாவட்ட நிர்வாகிகள் பலர் தூக்கியடிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கோட்டையைத் தொடர்ந்து தவெகவின் ‘டெல்லி’ எண்ட்ரி.. முதல்வர் விஜய்யின் புதிய வியூகம்..
திமுகவில் அதிரடி மாற்றங்கள்:
இதன் தொடர்ச்சியாக, வரும் ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ திமுக கட்சி அமைப்பில் மிகப்பெரிய அளவில் அதிரடி மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும் என்று அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்பின், தங்களது அரசியல் பலத்தை நிரூபிக்கவும், அடுத்தகட்ட எழுச்சியை நோக்கி நகரவும் திமுக தலைமை எடுத்து வரும் இந்த அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகின்றன.