செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.. ஆதாரங்களுடன் விசாரணைக்கு அனுமதி கோரிய ED.. தவெக அரசின் முடிவு என்ன?
இதே வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்க்குமாருக்கு அமலாக்கத்துறை நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த மே 15-ஆம் தேதியிடப்பட்ட, மூன்று பக்கங்கள் கொண்ட இந்த அதிரடிக் கடிதம் தலைமைச் செயலாளருக்கு வந்து சேர்ந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மத்திய அமலாக்கத்துறை (ED) தமிழ்நாடு அரசுக்கு அதிரடியாகக் கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தவெக அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அமலாக்கத்துறையின் இந்த நகர்வு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில், செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அந்தச் சமயத்தில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிக்க: கோட்டையைத் தொடர்ந்து தவெகவின் ‘டெல்லி’ எண்ட்ரி.. முதல்வர் விஜய்யின் புதிய வியூகம்..
15 மாதங்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி:
இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2024 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
விசாரணைக்கு முட்டுக்கட்டையாக இருந்த அனுமதி:
செந்தில் பாலாஜி மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டது. இருப்பினும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் பொது ஊழியராக (அமைச்சராக) இருந்ததால், அவர் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வ ‘விசாரணை அனுமதி’ கட்டாயத் தேவையாக உள்ளது. இதற்காகக் கடந்த 7 மாதங்களுக்கு முன்பே தமிழக ஆளுநருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதில் அடுத்தகட்ட நகர்வுகள் இல்லாத சூழலில், அமலாக்கத்துறை தற்போது தனது வியூகத்தை மாற்றியுள்ளது.
தலைமைச் செயலாளருக்கு வந்த கடிதமும், பென்டிரைவும்:
இதே வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்க்குமாருக்கு அமலாக்கத்துறை நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த மே 15-ஆம் தேதியிடப்பட்ட, மூன்று பக்கங்கள் கொண்ட இந்த அதிரடிக் கடிதம் தலைமைச் செயலாளருக்கு வந்து சேர்ந்துள்ளது. வெறும் கடிதம் மட்டுமின்றி, அதனுடன் ஒரு முக்கிய ‘பென்டிரைவ்’ இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பென்டிரைவில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தகுதி ஆதாரங்கள், அமலாக்கத்துறையின் ரகசிய விசாரணை குறிப்புகள் மற்றும் புகார்களின் நகல்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: “வாக்குறுதி கொடுக்கத் தெரிந்தவருக்கு, 10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு தெரியாதா?” முதல்வர் விஜய்யை சாடிய சீமான்!
தவெக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
முன்னாள் அமைச்சர் மீதான விசாரணைக்கு அனுமதி கோரி அமலாக்கத்துறை நேரடியாகத் தலைமைச் செயலாளருக்கு ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியிருப்பதால், தமிழக அரசியல் களம் சூடேறியுள்ளது. ஊழலுக்கு எதிரான வெளிப்படையான அரசியல் என்று கூறி ஆட்சியைப் பிடித்துள்ள புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு அனுமதி வழங்குமா? அல்லது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வேறு ஏதேனும் முடிவை எடுக்குமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.