“இருமொழிக் கொள்கையில் தவெக அரசு உறுதி”.. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த உத்தரவாதம்!!
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 1, 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டுள்ள 9 புதிய பாடப் புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் முறைப்படி வெளியிட்டார். புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக, ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன
இருமொழிக் கொள்கையில் தவெக அரசு மிகவும் உறுதியாக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள், புதிய பாடத்திட்ட அறிமுகம் குறித்துப் தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக, மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் விஜய் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பள்ளி கல்வி உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த விரிவான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதையும் படிக்க: “வாக்குறுதி கொடுக்கத் தெரிந்தவருக்கு, 10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு தெரியாதா?” முதல்வர் விஜய்யை சாடிய சீமான்!
இருவேறு தேதிகளில் பள்ளிகள் திறப்பு:
கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் பொருட்டும், அதே நேரத்தில் கல்வி நாட்களைத் திட்டமிட்டபடி தொடங்கும் விதமாகவும் இருவேறு தேதிகளில் பள்ளிகளைத் திறக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 4 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும். 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் காரணமாக, இந்த மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
குறிப்பாக, வெயிலின் தாக்கம் ஜூன் மாத தொடக்கத்திலும் அதிகமாக நீடித்தால், மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பு தேதிகளில் மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சருடன் மீண்டும் ஆலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆரம்பப் பள்ளிகளுக்குப் புதிய பாடத்திட்டம்:
நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 1, 2 மற்றும் 3-ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டுள்ள 9 புதிய பாடப் புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் முறைப்படி வெளியிட்டார். புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக, ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன. 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான புதிய பாடப் புத்தகங்கள், கிரையான்ஸ், பென்சில் பெட்டிகள் மற்றும் பிரத்யேக ‘வெல்கரோ செருப்புகள்’ உள்ளிட்ட அனைத்து விலையில்லா நலத்திட்டப் பொருட்களும் ஏற்கனவே அச்சிடப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்குத் தயாராக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே இவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
மேலும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!
இருமொழிக் கொள்கையில் தவெக அரசு தீர்க்கம்:
மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை ஏற்பதில் உள்ள நடைமுறைகள் மற்றும் தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ராஜ்மோகன் தவெக அரசின் கொள்கை நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். “இருமொழிக் கொள்கையில் தவெக அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்மொழி என்பது மிக முக்கியம். நம்முடைய சுற்றத்தாரோடும், உறவுகளோடும் பேசுவதற்குத் தாய்மொழியான தமிழும், உலகத்தோடு நம்மை இணைத்துக் கொண்டு பேசுவதற்கு ஆங்கிலமும் மட்டுமே போதுமானது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இதுதொடர்பாக அடுத்தகட்டக் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசின் இறுதி முடிவுகள் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.