“திமுக தனித்து போட்டியிட வேண்டும்!”.. களஆய்வுக் குழுவிடம் தொண்டர்கள் அதிரடி வலியுறுத்தல்!!
இந்த ஆய்வின் போது தொண்டர்களும் நிர்வாகிகளும் தனித்தனியாகக் குழுவைச் சந்தித்துப் பின்வரும் முக்கியப் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, தேர்தல் நடப்பதற்கு முன்பாகச் சில சட்டமன்றத் தொகுதிகளில் நிலவி வந்த உட்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்படவில்லை என கூறியுள்ளனர்.
சென்னை, ஜுன் 08: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள களஆய்வுக் குழுவிடம் “இனிவரும் தேர்தல்களில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்” என்று அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிரடியாக வலியுறுத்தியுள்ளனர். இந்த உட்கட்சி விவகாரம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: “ரூ.30,000 கோடி செலவு”.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தம்?.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!!
38 பேர் கொண்ட களஆய்வுக் குழு:
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆராய திமுக சார்பில் 38 பேர் கொண்ட பிரத்தியேகக் களஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினருடன் கடந்த மே மாதம் 16-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு, தொண்டர்களிடம் என்னென்ன விபரங்களைச் சேகரிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார். அதன்படி, தொகுதி வாரியாக இக்குழுவினர் தீவிரக் களஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சட்டமன்றத் தொகுதிக்குக் குறைந்தது 5 முதல் 6 மணி நேரமும், ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாகவும் இக்குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பின்மை:
இந்த ஆய்வின் போது தொண்டர்களும் நிர்வாகிகளும் தனித்தனியாகக் குழுவைச் சந்தித்துப் பின்வரும் முக்கியப் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். அதன்படி, தேர்தல் நடப்பதற்கு முன்பாகச் சில சட்டமன்றத் தொகுதிகளில் நிலவி வந்த உட்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்படவில்லை. தேர்தல் களத்தில் கூட்டணி கட்சியினருடைய தேர்தல் வேலைகள் மற்றும் ஒத்துழைப்புகள் சரியாகக் கிடைக்கவில்லை.
தனித்துப் போட்டி முழக்கம்:
தற்போதைய அரசியல் சூழலில், இனி வரக்கூடிய காலங்களில் திமுக எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் தனித்தே தேர்தலைச் சந்திக்கக் களத்தை உருவாக்க வேண்டும் என்று பல தொகுதிகளின் தொண்டர்களும் நிர்வாகிகளும் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளனர். தொண்டர்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த அனைத்துக் கருத்துக்களையும் களஆய்வுக் குழுவினர் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர். சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலம் போன்ற பகுதிகளில் இக்குழுவினர் கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க : “பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்”.. அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
திமுக தலைமை ஏற்கனவே உத்தரவிட்டபடி, இந்தச் சட்டமன்றத் தொகுதி வாரியான களஆய்வு அறிக்கையை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் தலைமையிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஒரு சில தொகுதிகளில் மட்டும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், அதுகுறித்து திமுக தலைமையிடம் அனுமதி கேட்கவும் இக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.