சென்னையில் கல்லூரி மாணவி கடத்தல்… ஓடும் காரில் 4 பேரால் பாலியல் வன்கொடுமை… தலைநகரை உலுக்கிய சம்பவம்!
Chennai Student Harassed: சென்னையில் கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தலைநகர் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயதான கல்லூரி மாணவி. இவர், கல்லூரி ப்ராஜெக்ட் தொடர்பாக கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். அப்போது, மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அதனை மாணவியின் செல்போனுக்கு மர்ம நபர்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த மாணவி கடந்த மார்ச் 9- ஆம் தேதி ( திங்கள்கிழமை) தான் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே செல்வதற்காக புறப்பட்டார். அப்போது, அந்த வழியாக வந்த காரில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியை கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது, அந்த மாணவியின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்த அந்த கும்பல் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த கும்பல் மாணவியை வேறொரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை
அப்போது, தனது உடல் நிலையில் சில மாற்றங்களை அந்த மாணவி உணர்ந்ததால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்ச் 10- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, வெளியே வந்த மாணவியை மீண்டும் அந்த கும்பல் காரில் கடத்தி சென்று மிரட்டியதாக தெரிகிறது. பின்னர், அந்த மாணவி தனது ஆண் நண்பரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதன் பின்னர் அந்த மாணவியும், அவரது ஆண் நண்பரும் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் படிக்க: இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறல்… ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது… படகு-மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல்!




மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த மாணவியின் புகாரின் உண்மை தன்மை குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 12- ஆம் வகுப்பு மாணவியை மறுமணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைநகரான சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கத்தில் நடந்த மற்றொரு சம்பவம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் முன்புறம் நின்று கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணை வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, 2- ஆவது முறையாக சென்னையில் கல்லூரி மாணவியை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் படிக்க: காட்டுக்குள் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. 6 தனிப்படைகள் அமைப்பு!