AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!

CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். காவிரி நீர் விவகாரம் தமிழ்நாட்டின் உயிர்ச்சார்ந்த மற்றும் உணர்வு ரீதியான பிரச்சினை என்றும், இதில் அரசியல் செய்யும் எண்ணமோ அவசியமோ தமது அரசுக்குத் துளிக்கூட இல்லை என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!
முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Aug 2026 10:51 AM IST

சென்னை, ஆகஸ்ட் 07: தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில், காவிரி நதிநீர் உரிமை, மேகதாது அணை விவகாரம் மற்றும் டெல்டா விவசாயிகளுக்கான குறுவை நிவாரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக குழுத் தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையே சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் அரங்கேறியது. எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பேரவையில் நேரடியாக முகம் கொடுத்து விரிவான பதிலடியைக் கொடுத்தார் முதல்வர் விஜய்.

இதையும் படிக்க: தவெக அரசுக்கு திமுக வைத்த செக்.. முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக நிபந்தனை!!

காவிரி உரிமையில் சமரசமில்லை:

எதிர்க்கட்சித் தலைவர் காவிரி மற்றும் மேகதாது குறித்துப் பேசியதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “காவிரி விவகாரம் என்பது தமிழ்நாட்டின் உயிர் ஆதாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இதை வைத்து மலிவான அரசியல் செய்யும் எண்ணமோ அல்லது அவசியமோ நமது அரசுக்குத் துளிக்கூடக் கிடையாது. மேகதாது அணை விவகாரத்தில் சட்டமன்றத்தில் நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தைப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதுமட்டுமன்றி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் தகவல்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி மேகதாது திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு மீண்டும் நேர்முகக் கடிதம் அனுப்பியுள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

பெங்களூரு செல்ல திட்டமிட்டேன்:

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்ற தனது பெங்களூர் பயண திட்டம் குறித்துப் பேசிய முதல்வர், “பகை நாடுகளே பேசித் தீர்க்கும் போது, பக்கத்து மாநிலத்துடன் பேசித் தீர்க்கலாம் என்ற நோக்கத்தில் தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய முயற்சியில் எனக்கு ஏதேனும் அவமானம் நேரிட்டாலும், அதை என் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தாங்கிக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

செய்தித்தாள் படித்தால் தெரியும்:

தொடர்ந்து குறுவை சாகுபடி நிவாரணம் குறித்துப் பேசிய முதல்வர் விஜய், குறுவை சாகுபடிக்கான சிறப்பு நிவாரணத் தொகுப்பு ஏற்கனவே விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். “அரசியலே நாங்கள்தான் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை. தினசரி காலையில் பேப்பரை எடுத்துப் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது நன்றாகத் தெரிந்திருக்கும்” என்று உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு நேரடியாகவே பதிலடி கொடுத்தார்.

உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை:

முதல்வரின் பதிலடிக்குப் பின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அரசு கொடுத்தது வெறும் ரூ.134 கோடி மதிப்பிலான வழக்கமான சிறப்புத் தொகுப்புதான். ஆனால், விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரண நிதி. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தினசரி பேப்பர் படித்தால் மட்டும் போதாது; உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க: மாறிய பெயர்கள்… மாறாத திட்டங்கள்?.. வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிளம்பிய விமர்சனம்!!

மேலும், கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது போலத் தவெக அரசு கூட்டுவதற்கு என்ன பயம் என்றும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Follow Us