கொளுத்தும் வெயில் ஒருபக்கம்.. கொட்டும் மழை ஒருபக்கம் – அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜூலை 28, 2026: தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய ஏழு தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலப் பகுதியில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய தமிழகம் முழுவதிலும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை?
ஜூலை 30-ஆம் தேதியைப் பொருத்தவரையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஏனைய தமிழகம் முழுவதிலும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது…. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளைப் பொருத்தவரையில், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஏனைய தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் பல்வேறு மாவட்டங்களில் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மதுரை கிராமம் பற்றி தவறான கருத்து? ஜனநாயகன் படத்துக்கு எதிராக புதிய வழக்கு – இயக்குநருக்கு நோட்டீஸ்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.