ராயபுரம் காவல் ஆய்வாளர் மீது பாய்ந்த நடவடிக்கை.. சென்னை ஆணையர் எடுத்த அதிரடி ஆக்சன்!
Royapuram Inspector Waiting List : இளம் பெண்ணை ஒருமையில் பேசியதாகவும், முதியவரை முகத்தில் குத்தியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை வடபழனியில் உள்ள மாலில் வேலை பார்த்து வந்தார். இவரும், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சையது இப்ராஹிம்க்காக அந்த பெண் மதம் மாறி உள்ளார். இந்த நிலையில், இப்ராஹிமுக்கு வேறொரு பெண்ணுடன் ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த இளம் பெண் சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களுடன் திருமண மண்டபத்திற்கு சென்று நீதி கோரி முழக்கமிட்டார். அப்போது, அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதில், ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம் அந்த இளம் பெண்ணை ஆபாசமாக திட்டியதுடன் அவருடன் வந்த அக்பர் அலி என்பவரை கடுமையாக தாக்கி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம் மீது நடவடிக்கை
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அந்த இளம் பெண்ணுக்கு ஆதரவாக ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு நேரடியாக காவல் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் சிதம்பரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்களை அடிப்பதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தது என கேள்வி எழுப்பியதுடன், மணமகன் வீட்டாரிடம் பணம் வாங்கி விட்டீர்களா என்றும் குற்றம் காட்டினார்.
மேலும் படிக்க: ரூ.50 லட்சம் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ராமநாதபுரம் சார்-பதிவாளர்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை!




வேறொரு பெண்ணை திருமணம் செய்த சையது இப்ராஹிம்
இதன் காரணமாக தவெக எம்எல்ஏ விஜய் தாமுவுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த இளம் பெண்ணை ஏமாற்றிய சையது இப்ராஹிம் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் பெற்றதோடு, வேறொரு இடத்தில் வைத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த அவரது காதலி தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு
அந்த புகாரில், சையது இப்ராஹிமின் தாய் மாமா, சகோதரர் மற்றும் அவருக்குப் பெண் கொடுத்த திருமண வீட்டார் மீது குற்றம் சாட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் ராயபுரம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, ராயபுரம் ஆய்வாளர் சிதம்பரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா!