ஆடு திருடிய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி வழங்கியது நியாயமா முதல்வரே? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
Nainar Nagendran Condemned Tn Govt: திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில், ஆடு திருட்டில் தொடர்புடையவருக்கு அரசு பதவி வழங்கியது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக வழக்கறிஞர் ஏ. ஷேக் சுல்தான் நியமனம் செய்து உத்தரவிட்டது. இதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த 65 வயது ஏழை பெண்மணி தனது வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த ஆட்டுக் குட்டியை காரில் கடத்திச் சென்ற வழக்கில் தற்போது திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேக் சுல்தான் ஈடுபட்டுள்ளார். இது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் அவர் சிக்கி உள்ளார்.
லஞ்சத்தின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர் நியமனம்
மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களின் நியமனங்கள் லஞ்சத்தின் அடிப்படையில் நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, அந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ஷேக் சுல்தான் நியமனம் செய்யப்பட்டிருப்பது அமைந்துள்ளது. எனவே, முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் இந்த முறைகேடான நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள் மீதும், குற்ற பின்னணி கொண்டவர்களை பதவியில் அமர்த்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும் படிக்க: கல்யாண கோலம் மாறுவதற்குள் பரபரப்பு.. மாமனார் வீட்டில் இறக்கிவிடப்பட்ட மனைவி.. காதலியுடன் எஸ்கேப்- ஆன புதுமாப்பிள்ளை!




ஆய்வு என்ற பெயரி தவெகவினர் அட்டூழியம்
அத்துடன் பல்வேறு இடங்களில் ஆய்வு என்ற பெயரில் தமிழக வெற்றி கழகத்தினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகே உள்ள அரசு பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை சுட்டிக்காட்டி மாணவர்கள் முன்னிலையில் அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை குறை கூறி லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்துக்குரியதாகும்.
தவெகவினர் நடத்துவது ஆய்வில்லை. அராஜகம்
தனியார் நிறுவனங்களில் நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போன்று படிக்கும் குழந்தைகளிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டு அவர்களை திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களை குற்றவாளி கூண்டு நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் ஆய்வு கிடையாது. அது அராஜகம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கோவையில் காதலி விவகாரத்தில் புகைப்பட கலைஞர் கொலை.. உடலை தண்டவாளத்தில் வீசிய கொடூரம்.. இருவர் அதிரடி கைது!