கோவையில் காதலி விவகாரத்தில் புகைப்பட கலைஞர் கொலை.. உடலை தண்டவாளத்தில் வீசிய கொடூரம்.. இருவர் அதிரடி கைது!
Coimbatore Photographer Murder: கோயம்புத்தூர் மாவட்டத்தில் காதலியுடன் நெருங்கி பழகியை ஏற்க முடியாக காதலன் புகைப்பட கலைஞர் சினிமா பாணியில் தனியாக வருமாறு அழைத்து மது கொடுத்து கழுத்தை நெறித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றதாக காதலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் அருகே உள்ள மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ( 24 வயது). புகைப்படக் கலைஞர். இவர், கடந்த வாரம் புதிய புகைப்பட ஆர்டர் இருப்பதாக கூறிவிட்டு ஒட்டன்சத்திரத்துக்கு சென்றார். அங்கு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் காணாமல் போன பிரவீனை தேடி வந்தனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் கிணத்துக்கடவு அருகே உள்ள ஏ. பி. சி. தியேட்டர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதை அறிந்த தடாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ரயிலில் அடிபட்டு உயிரிழந்து புகைப்படக்காரர் பிரவீன் என்பது தெரிய வந்தது.
கோவை நீதிமன்றத்தில் ஆஜரான இருவர்
பிரவீன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவே அவரது குடும்பத்தினர் நினைத்து வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. இதில் கோவை ஜே. எம். 1 நீதிமன்றத்தில் கரூரை சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, நாங்கள் தான் பிரவீனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசினோம் எனக்கூறி சரணடைந்தனர். இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காதலியுடன் நெருங்கி பழகியவரை தீர்த்துக்கட்டிய காதலன்
இதில், கரூரை சேர்ந்த மனோஜ் குமாரும், கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்தனர். இதனிடையே, அந்தப் பெண் புகைப்பட கலைஞர் பிரவீனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதை அறிந்த மனோஜ் குமார் பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, பிரவீன் குமாரை தொடர்பு கொண்டு ஒட்டன்சத்திரத்தில் போட்டோ ஷூட் எடுக்க வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி அங்கே சென்ற பிரவீனுக்கு மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் மது அருந்த செய்துள்ளனர்.




கொலை செய்து தண்டவாளத்தில் உடல் வீச்சு
தொடர்ந்து, அவரை காரில் அழைத்து சென்ற போது, கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது சடலத்தை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள போத்தனூர் ரயில்வே எல்லைக்கு உட்பட்ட ஏ. பி. சி. தியேட்டர் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக சென்ற ரயில்கள் பிரவீன் உடல் மீது ஏறியதில் துண்டு துண்டாகி சிதறியது தெரியவந்தது. போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.