தவெக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை – டென்ஷனான சபாநாயகர் – என்ன நடந்தது?
திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. விஜியின் பேச்சால் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கோபமடைந்தார். பேசும்போது சர்ச்சை கருத்துகளை தவிர்க்க வேண்டும் எனவும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 11 : திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. விஜியின் பேச்சால் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கோபமடைந்தார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.
தவெக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை – டென்ஷனான சபாநாயகர்
இந்த நிலையில், திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ. விஜி பேசுகையில், “எனது தொகுதியில் கொடுக்கப்பட்ட பட்டாவுக்கான இடங்கள் கிடையாது. தேர்தலுக்காக போலி பட்டா கொடுத்துள்ளார்கள். வேண்டுமென்றால் ஆய்வு செய்து பாருங்கள்” எனத் தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகளை நோக்கி அனைவரும் உட்காருங்கள், உண்மையைதான் பேசுகிறேன் என்றார். இதனால் கோபமடைந்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், முதலில் நீங்கள் உட்காருங்கள் என்று கடிந்து கொண்டார்.
இதையும் படிக்க : ‘போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்’ – முதல்வர் விஜய் முன்னிலையில் உறுதியேற்ற மாணவர்கள்




இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கடந்த ஆட்சியில் ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்கியிருக்க கூடும். அந்த பட்டாவை லே-அவுட் செய்யப்பட்டு வழங்கப்படும். பல இடங்களில் குறைபாடுகள் இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது. முன்னதாக, திமுகவை விமர்சித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் பேசும்போது எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பேச வேண்டாம் என்று பேரவைத் தலைவர் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான விவாதத்தில் கலந்துகொண்டு முதல்முறையாக சட்டமன்றத்தில் பேசிய தவெக சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார், எதிர்க்கட்சியான திமுகவை விமர்சித்து பேசினார். அப்போது, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்கள் மனதில் இருந்திருந்தால் சட்டமன்றத்திற்குள் வந்திருப்பார் என்றார்.
இது திமுக எம்எல்ஏகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடந்த ஆட்சியில் எங்களின் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன் சுற்றிக் கொண்டிருந்தார். 1.31 கோடி பெண்கள் மனதில் மு.க. ஸ்டாலின் குடியிருக்கிறார்” என்றார்.
இதையும் படிக்க : ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!
தொடர்ந்து பேசிய சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை நோக்கி, “பேசும்போது சர்ச்சை கருத்துகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகப்பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். அந்த கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்” என அறிவுறுத்தினார்.