அதிமுகவில் இருந்து கூண்டோடு விலகும் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்.. சென்னை நோக்கி படையெடுத்த நிர்வாகிகள்!!
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள் 11 பேரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் மேலும் 30-க்கும் மேற்பட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை உத்தரவிட்டது.
சென்னை, ஜூலை 20: அதிமுகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சிப் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவெடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை நோக்கிப் பேருந்துகள் மற்றும் கார்களில் புறப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகத்தை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்எல்ஏ அதிரடி கைது!!
மோதலுக்கான பின்னணி என்ன?
அவருக்குப் பதிலாக விழுப்புரத்தைச் சேர்ந்த பசுபதி என்பவரைப் புதிய மாவட்டச் செயலாளராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்திற்குப் புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி வருகை தந்தார். அப்போது சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. இந்த மோதலில் பசுபதியின் கார் மீது சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
அதிரடி நீக்கம் – ஆதரவாளர்கள் பதிலடி:
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள் 11 பேரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினமும் மேலும் 30-க்கும் மேற்பட்டோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தலைமை உத்தரவிட்டது.
தலைமையின் இந்த அடுத்தடுத்த அதிரடி நீக்க நடவடிக்கையால் கடும் கொந்தளிப்படைந்த சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள், தற்போது அதிமுகவிலிருந்து கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர்.
சென்னைக்குப் புறப்பட்ட நிர்வாகிகள்:
திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது கட்சிப் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதற்கான கடிதங்களுடன் சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். திண்டிவனத்தில் இருந்து 5 பேருந்துகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கார்களில் அணிவகுத்து அவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிக்க: “தளபதி விஜய் சும்மா விடமாட்டார்!”.. ஊழல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆனந்தின் பரபர பேச்சு!
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் இப்படி கூண்டோடு விலகத் தொடங்கியிருப்பது அக்கட்சிக்கு அந்த மண்டலத்தில் மிகப்பெரிய பின்னடைவாகவும், அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காகவும் மாறியுள்ளது.