“சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!
தேர்தலுக்குத் தேர்தல் கழகத்தின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது; மக்கள் மத்தியில் அதிமுக தன் நன்மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது. திமுகவில் கேள்வி கேட்டதற்காகவே தந்தை எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இது. ஆனால் இன்றைக்கு இந்த இயக்கத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது, யாரும் கருத்துச் சொல்லக் கூடாது என்ற சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது.
விழுப்புரம், ஜுன் 14: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதை விட, மக்கள் மத்தியிலிருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி.சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கே இந்தத் தொடர் வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.வி.சண்முகம் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இன்றைக்குப் பொதுச்செயலாளராக இருக்கும் வரை கட்சி தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியையே சந்தித்து வருகிறது.
இதையும் படிக்க: “விசிக எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து வெளியே வரலாம்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
இபிஎஸ்-ஸின் சர்வாதிகாரப் போக்கு:
தேர்தலுக்குத் தேர்தல் கழகத்தின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது; மக்கள் மத்தியில் அதிமுக தன் நன்மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது. திமுகவில் கேள்வி கேட்டதற்காகவே தந்தை எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இது. ஆனால் இன்றைக்கு இந்த இயக்கத்தில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது, யாரும் கருத்துச் சொல்லக் கூடாது என்ற சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது. “யாருடைய ஆலோசனையையும் நான் கேட்க மாட்டேன், என் குடும்பத்தாரின் கருத்தையும், யார் பணம் தருவார்களோ அவர்களின் கருத்தையும் மட்டும்தான் கேட்பேன்” என்று எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதால் தான் கட்சி இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியாத பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.தலைமை கழகத்திலிருந்து அடிமட்டத் தொண்டன் வரை கட்சி ஏன் தோற்றது என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. ஆனால், கட்சியை வழிநடத்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் இன்னும் உறைக்கவில்லை.
எம்ஜிஆரை துரோகி என்றவர்கள்தான் இவர்களும்:
கட்சிக்காக 50 ஆண்டு காலம் உழைத்தவர்கள், இரத்தம் சிந்தியவர்கள் எல்லாம் வேதனையோடு கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பார்த்துச் சாதாரணமாக ‘துரோகி’ என்று முத்திரை குத்துகிறார். அன்று திமுகவிலிருந்து நீக்கிய போது எம்.ஜி.ஆரையும் துரோகி என்றுதான் சொன்னார்கள். அண்ணா, கலைஞர் ஆகியோர் முதலமைச்சராவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த எம்.ஜி.ஆரே துரோகி என்று சொன்னவர்கள்தான் இவர்களும். அதனால் எம்.ஜி.ஆர் துரோகி ஆகிவிடுவாரா?.
பாமக போட்ட பிச்சை தான் இந்த இடங்கள்:
வாய் கூசாமல் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். அந்த 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சி போட்ட பிச்சை. பாமக மட்டும் கூட்டணியில் இல்லை என்றால், வட மாவட்டங்களான கடலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி ஆகிய எங்குமே அதிமுக வென்றிருக்க முடியாது. ஏன், எடப்பாடி பழனிசாமியே சேலத்தில் தட்டுத்தடுமாறித்தான் தப்பிப் பிழைத்து வென்றிருப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இதையும் படிக்க: “தவெக அரசின் தவறுகளை ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்”.. அதிமுகவினருக்கு இபிஎஸ் வகுத்த அதிரடி வியூகம்!
சீட்டுக்கட்டு போல் சரியும் அதிமுக:
தற்போது அதிமுகவில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கொத்துக்கொத்தாக விலகி வருகிறார்கள். சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போலச் சிலர் செயல்படுகிறார்கள். இப்போதாவது காலம் கடந்த பிறகாவது, தலைமை தனது தவறுகளை உணர்ந்து, சுய பரிசோதனை செய்துகொண்டு சரி செய்யாவிட்டால், இந்த இயக்கத்தையும் தொண்டர்களையும் காப்பாற்ற முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.