AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக-வுக்கு படையெடுக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.. கட்சியை பலப்படுத்த இபிஎஸ் அவசர ஆலோசனை!!

முக்கியத் தலைவர்கள் விலகிய மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை உடனடியாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்/இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அடிமட்ட அளவில் இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர்களையும் சென்னைக்கு நேரில் அழைத்து இபிஎஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

தவெக-வுக்கு படையெடுக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.. கட்சியை பலப்படுத்த இபிஎஸ் அவசர ஆலோசனை!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Jul 2026 12:04 PM IST

சென்னை, ஜூலை 03: சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக மிக இக்கட்டான, நெருக்கடியான காலகட்டத்தைச் சந்தித்து வருகிறது. கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் அடுத்தடுத்து விலகி, முதல்வர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்‘ கட்சியில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், கட்சியைப் பலப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தொய்வை நீக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.

இதையும் படிக்க: “யாரும் செய்யலனா நாங்க செய்வோம்!”.. மதுரையில் திடீரென களம் இறங்கிய பொறுப்பு ஆளுநர்.. நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!

அதிமுகவை அதிரவைத்த இணைப்பு விழா:

நேற்றைய தினம் மகாபலிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட கட்சி இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுகவின் வளம் வாய்ந்த, தங்களது மாவட்டங்களில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்த முக்கியப் புள்ளிகள் பெருந்திரளான தொண்டர்களுடன் தவெக-வில் இணைந்தனர். அதில், அதிமுகவின் மிக முக்கிய முகங்களாக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட நான்கு முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

எம்.எல்.ஏ-க்கள் அதிரடி ராஜினாமா:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியில் நீடித்த ஆறு பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெக-விற்குச் சென்றுள்ளனர். அவர்களில் ஜெயகுமார், சத்தியபாமா, மரகதம் குமாரவேல், இசக்கி சுப்பையா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இதுமட்டுமன்றி, அதிமுகவின் மற்றொரு மிக முக்கியத் தலைவரான எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் தற்போதைய கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக இந்த செய்தித் தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இபிஎஸ் நடத்தும் அவசரக் குழு கூட்டம்:

முக்கியத் தலைவர்கள் விலகிய மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை உடனடியாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்/இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் என அடிமட்ட அளவில் இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர்களையும் சென்னைக்கு நேரில் அழைத்து இபிஎஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு முதலாவதாகச் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மகாபலிபுர விழாவுக்குப் பிறகு அந்த மாவட்டத்தில் கட்சி நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 11.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விலகியதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதற்கு மாற்றாக அடுத்தகட்டப் பொறுப்பாளர்களை எப்படி நியமிப்பது என்பது குறித்தும் அந்த மாவட்ட நிர்வாகிகளை அவசரமாக அழைத்து இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

விவாதிக்கப்படும் 5 முக்கிய அம்சங்கள்:

தோல்வி மற்றும் சரிவிற்கான காரணங்கள்: கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, தற்போது சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கான உண்மையான கள நிலவரங்கள் மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பது. தவெக-விற்குச் சென்ற முக்கியத் தலைவர்களுக்கு மாற்றாக, அந்தந்த மாவட்டங்களில் புதிய திறமையான நிர்வாகிகளை எப்படி ‘ரீப்ளேஸ்’ செய்வது மற்றும் கட்சியை எப்படி மறுசீரமைப்பு செய்வது என்பது குறித்த வியூகம்.

இதையும் படிக்க : “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!

மாவட்டத் தலைவர்கள் மாறினாலும், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உள்ளாட்சி/ஒன்றிய நிர்வாகிகள் கட்சி மாறாமல் அவர்களை ஒருங்கிணைத்துத் தக்கவைப்பதற்கான வழிமுறைகள். அடுத்து வரக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுகவின் தனித்துவமான போட்டி வியூகம் எப்படி இருக்க வேண்டும், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்த முன்கூட்டிய திட்டமிடல். விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி, அதிமுக இன்னும் உயிர்ப்புடன் வலுவாகத் தான் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான களப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Follow Us