ஜோசப் விஜய் அடுத்த பிரதமரா? அதை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை.. காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்!
Congress Leader Manickam Tagore : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமராக வருவார் என்ற கருத்தை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம். பி. தெரிவித்துள்ளார். அவர் கூறியதை முழுமையாக பார்க்கலாம்.
சுதந்திரப் போராட்ட தியாகி சத்தியமூர்த்தியின் 139- ஆவது பிறந்தநாளையொட்டி, மதுரை மாவட்டம், சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொதுவாக தொண்டர்கள் வரும்போது என்னையும் பிரதமர் ஆக வேண்டும். மத்திய அமைச்சராக வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர். அதேபோல, தமிழக முதல்வர் விஜயும் பிரதமர் ஆக வேண்டும் என்று தொண்டர்கள் கூறுவதை பெரிதாக எடுக்க வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் முகம் மற்றும் தமிழகத்தில் இந்த ஆட்சி அமைய முதலில் ஆதரவு தந்தது காங்கிரஸ் கட்சி தான். தொண்டர்களின் முழக்கங்களுக்கு பதில் கூற ஆரம்பித்தால், பதில் கூறிக் கொண்டே இருக்கலாம்.
தவெக அமைச்சர்களை தொண்டராகவே நினைக்கிறேன்
தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களை நான் தொண்டர்களாகவே தான் நினைக்கிறேன். தமிழகத்தில் ஊழல் செய்யாத மற்றும் லஞ்சம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்றால், அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் சரியானது ஆகும். புதிய தொடக்கத்துக்கு அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார். முன்னதாக, மாற்றுக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு ” லஞ்சம் தவிர்- நெஞ்சம் நிமிர்” என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுகளை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.
மேலும் படிக்க: சவுதியில் சுடப்பட்ட தமிழக மீனவர்.. பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. அதிமுக வெளிநடப்புக்கு பின் இபிஎஸ் ஆவேசம்!!




முதல்வர் விஜய் பிரதமராக வருவார்
தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து முதல் முறையிலேயே ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகமும், அந்த கட்சியில் தலைவருமான முதல்வர் ஜோசப் விஜய், வரும் காலங்களில் நாட்டின் பிரதமராக வருவார் என்று தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதேபோல, தவெக கட்சி சார்பில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இது போன்ற கருத்தை கட்சியினர் முழக்கமிட்டு வருகின்றனர்.
தவெக – காங்கிரஸ் கூட்டணியில். . .
அந்த வகையில் தான், தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன், காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் முதல்வர் விஜய் பிரதமராக வருவார் என்று கூறுகிறார்களே என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தான் வருங்காலங்களில் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் வருங்கால பிரதமர் என்று அந்த கட்சியினர் கூறி வருவது சற்று பேசும் பொருளாகியுள்ளது.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்க வேண்டும், அதை திறக்க வைக்காதீர்கள்…. – முதல்வர் விஜய் பேச்சால் பரபரப்பு