தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு… அமித் ஷா தலைமையிலான குழுவில் சிஎம் விஜய்க்கு முக்கிய பொறுப்பு.. என்ன அது!
South Indian CMs Conference Committee: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெரும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டு குழுவில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது என்ன பொறுப்பு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 19- ஆம் தேதி) இரவு தொடங்கி நாளை வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தருகிறார். இதில், தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டுக்கான குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய கவுன்சில் குழுவில் முதல்வர் விஜய்க்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
31- ஆவது தென் மாநில முதல்வர்கள் மாநாடு
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி, கடந்த 2022- ஆம் ஆண்டு முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் முதல்வர்கள் மாநாடு நடைபெறாத நிலையில், தற்போது 31- ஆவது தென் மாநில முதல்வர்கள் மாநாடு கோவளத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார்.
மேலும் படிக்க: “கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு தடை விதித்த உத்தரவு வாபஸ்”.. கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய தமிழக அரசு!




5 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர்
தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் சதீசன், புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்படும்
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான கட்டமைப்பு மேம்பாடு, கூட்டுறவை பலப்படுத்துதல், கல்வி, சுகாதாரம், நீர்வள பகிர்வு, பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், எல்லை பிரச்சினைகள், குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மேடையை காவிரி நீர் பங்கீடு விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “கல்லணை இன்றும் நிற்கிறது, நாம் கட்டும் பாலம் ஏன் உடைகிறது?” பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் – எ.வ.வேலு இடையே அனல்பறந்த விவாதம்!!