“விஜய் மாமா” எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.. கர்நாடகாவில் சுட்டு கொல்லப்பட்டவரின் மகள் உருக்கமான வீடியோ!
Karnataka Shooting Died: கர்நாடக வனத்துறை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்த டேவிட் குமார் என்பவரின் மகள் பெஸ்ஸி தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு உருக்கமான வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் என்ன பேசியுள்ளார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த டேவிட் குமார் என்பவரின் மகள் பெஸ்ஸி தனது குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விஜய் மாமா, எனது அப்பா உயிரிழந்து விட்டார். எனது அப்பா இருந்திருந்தால் நான் என்னென்ன வாங்கி வர சொல்கிறேனோ, அதை அனைத்தையும் எனது அப்பா வாங்கி தருவார். தற்போது, எனது அப்பா உயிருடன் இல்லை. எங்களுக்கு தேவையானவற்றை இனிமேல் யார் வாங்கி தருவார். எனது ஊரில் நிறைய பேர் புதிய வீடு கட்டி வருகின்றனர். அப்போது, எனது அப்பாவிடம் நீங்களும் புதிய வீடு கட்ட வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.
நீங்களாவது வந்து பாருங்கள் விஜய் மாமா
இதனால், அவர் கடன் வாங்கி புதிய வீடு கட்டி இருக்கிறார். தற்போது, அந்த கடனை யார் அடைக்க போகிறார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. என்னிடம் நன்றாக படித்தால் மாவட்டத்துக்கே கலெக்டர் ஆகலாம் என்று எனது அப்பா அடிக்கடி கூறுவார். தற்போது, அவர் இல்லாத சூழ்நிலையில் நான் எப்படி படிப்பது. நாங்கள் தற்போது மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகிறோம். யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. நீங்களாவது வந்து பாருங்கள் விஜய் மாமா என்று அந்த வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.




மேலும் படிக்க: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!
துப்பாக்கி சூட்டில் தமிழர்கள் உயிரிழந்ததன் பின்னணி
கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு அங்கு வசித்து வரும் பீட்டர், அந்தோணிசாமி, டேவிட் குமார் ஆகியோர் நாட்டு துப்பாக்கிகளுடன் மான் வேட்டையாடுவதற்கு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், குண்டு பாய்ந்ததில் மேற்கண்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
#Karnataka #Breaking #HanurEncounter
“Vijay Mama, Please Come to Our Home”: Victim’s Daughter Appeals to Tamil Nadu CM
Chamarajanagar: Following the shooting deaths of three suspected poachers in Hanur taluk, the daughter of deceased David Kumar has appealed to @CMOTamilnadu… pic.twitter.com/0k97QWZnNB
— Mahesh M Goudar (@IamMGoudar) August 19, 2026
3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
மேலும், தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. மேலும், முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “கர்நாடக விவகாரத்தில் தமிழகம் தலையிடக்கூடாது” உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்… முதல்வர் டி.கே.சிவகுமார்!