“யாரும் செய்யலனா நாங்க செய்வோம்!”.. மதுரையில் திடீரென களம் இறங்கிய பொறுப்பு ஆளுநர்.. நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!
இதனைத் தொடர்ந்து, அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா விடுதிக்குச் சென்ற ஆளுநர், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளை அங்கு வரவழைத்துத் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது.
மதுரை, ஜூலை 03: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தியிருப்பது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நேற்று வருகை தந்திருந்தார். அப்போது, திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அவருக்கு ‘வீர சவர்க்கார்’ புகைப்படத்தைப் பரிசாக வழங்கினர்.
இதையும் படிக்க : “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!
வைகை ஆறு குறித்து ஆளுநர் பேச்சு:
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “வைகை ஆற்றை யாரும் சீரமைக்க முன்வரவில்லை என்றால், ஆளுநர் மாளிகையே (ராஜ் பவன்) அதற்கான முயற்சிகளையும் தலைமைப் பொறுப்பையும் ஏற்று, வைகை ஆற்றை மீட்டுருவாக்கம் செய்யும்” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து, அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா விடுதிக்குச் சென்ற ஆளுநர், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளை அங்கு வரவழைத்துத் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது.
ஆலோசனையில் விவாதிக்கப்பட்டவை:
வைகை ஆற்றைத் தூய்மையாக வைத்திருப்பது, ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆளுநர் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், மக்கள் குறைதீர்ப்பு, ‘விக்சித் பாரத்’, ‘ஸ்வச் பாரத்’ உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி கல்வி, திறன் மேம்பாடு குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார். மாநகர காவல் ஆணையரிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை பாதுகாப்புக்காகக் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!
சர்ச்சையாக மாறியது ஏன்?
இதற்கு முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுபோன்று மாவட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தியபோது, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக அது இருப்பதாகக் கூறி தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தற்போதைய பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மதுரையில் உள்ளூர் அதிகாரிகளைத் திரட்டி மீண்டும் அதுபோன்ற ஒரு ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருப்பது தற்பொழுது புதிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.