“முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!
மதிமுக பொதுக்குழுவில் தவெக தலைவர் விஜய் கூறியதாக வைகோ பேசியதைச் சுட்டிக்காட்டிய ரகுபதி, "மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், அவர்களை நான் வெற்றி பெற வைக்கிறேன் என்று விஜய் பகிரங்கமாகப் பேசினார். ஆனால், அங்கேதான் குதிரை பேரமும், யானை பேரமும் நடந்திருக்கிறது என்றார்.
சென்னை, ஜூலை 02: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன்னதாகவே, செந்தில் பாலாஜியைக் கைது செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அதிரடியாக குற்றஞ்ஞாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “யாரோ ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென கொடுத்த புகாரின் அடிப்படையில், எந்தவித விசாரணையும் இன்றி அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்தி போன்றவர்கள் மீது தொடர்ந்து அம்பு பாய்கிறது. விஜய் கரூருக்குப் போவதற்கு முன்னால் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என்ற சபதத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்.
மேலும் படிக்க: ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது FIR பதிவு.. வெளியான ஷாக் விவரங்கள்!!
விஜயை ‘வாஷிங் மெஷின்’ என விமர்சினம்:
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்த அவர், “திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கூறியது போல, தவெக தலைவர் விஜய் ஒரு ‘வாஷிங் மெஷின்’போல செயல்படுகிறார். ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி போன்றவர்களைத் தன் கட்சிக்குள் இழுத்து, அவர்களைப் புனிதர்களாக மாற்ற விஜய் முயல்கிறார்” என்று சாடினார்.
திமுக மீது வீண் பழி:
சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் ‘குதிரை பேர’ அரசியலில் திமுக ஈடுபடுவதாக தவெக மற்றும் எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டை ரகுபதி திட்டவட்டமாக மறுத்தார். “திமுகவுக்குக் குதிரை பேர அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், 2017-லேயே எங்களிடம் 109 எம்.எல்.ஏக்கள் இருந்தபோது ஆட்சிக்கு வந்திருக்க முடியும். ஆனால் கொள்ளைப்புற வழியாக ஆட்சிக்கு வர எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை; எப்போதும் மக்களைச் சந்தித்து, ஜனநாயக முறைப்படிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்” என்றார்.
மதிமுக மற்றும் வைகோ குறித்த விவகாரம்:
மதிமுக பொதுக்குழுவில் தவெக தலைவர் விஜய் கூறியதாக வைகோ பேசியதைச் சுட்டிக்காட்டிய ரகுபதி, “மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், அவர்களை நான் வெற்றி பெற வைக்கிறேன் என்று விஜய் பகிரங்கமாகப் பேசினார். ஆனால், அங்கேதான் குதிரை பேரமும், யானை பேரமும் நடந்திருக்கிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையோ அல்லது காவல்துறையோ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!
சினிமா சூட்டிங் போல நடக்கும் தமிழக ஆட்சி:
“இன்று தமிழகத்தில் நடப்பது ஒரு சினிமா சூட்டிங் போல இருக்கிறது. சட்டமன்றம் ஒரு திரைப்படப்பிடிப்பு நிலையமாகவும், அங்கே முதலமைச்சர் ஹீரோவாகவும், மற்றவர்கள் நடிகர்களாகவும் செயல்படுகிறார்கள். எல்லோரையும் நடிகர்களாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சிக்குத் தான் சேரும்” என ரகுபதி எள்ளி நகையாடினார். இறுதியாக, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் விலகுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “குளத்தில் தண்ணீர் இல்லையென்றால் அடுத்த குளத்திற்குப் பறவைகள் செல்வது இயற்கை; தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்துப் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.