Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுங்க..!

Thiruvallur Child Assault: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியைக் கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுங்க..!
குற்றவாளிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 21 Jul 2025 12:51 PM

திருவள்ளூர் ஜூலை 2025: திருவள்ளூர் மாவட்டம் (Thiruvallur District), கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியைக் கண்டறியத் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்து 8 நாட்களாகியும் குற்றவாளி பிடிபடாத நிலையில், தற்போது சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படம் மற்றும் வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்பவத்தின் விவரம்: ஒரு கொடூரமான தாக்குதல்

கடந்த 2025 ஜூலை 12 ஆம் தேதி, ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு மர்ம நபர் அவளைப் பின்தொடர்ந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும், அந்த நபர் சிறுமியின் வாயைப் பொத்தி, அருகில் உள்ள மாந்தோப்பு அருகே உள்ள காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்றுள்ளார். அங்குச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த சமயம் பார்த்துச் சிறுமி அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்து தனது பாட்டியிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பாட்டி, உடனடியாகச் சிறுமியைப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர், சிறுமி மேல் சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Also Read: வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய இளைஞர்

பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

காவல்துறையின் தீவிரத் தேடுதல் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கோரிக்கை

இந்தச் சம்பவம் குறித்துப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிப்படைகள் அமைப்பு: திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) தலைமையில், மூன்று டி.எஸ்.பி.க்கள் (DSPs) உள்ளிட்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

வீடியோ ஆதாரங்கள்: முன்னதாக, சிறுமியை அந்த நபர் தூக்கிச் செல்லும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. தற்போது, காவல்துறையினர் சந்தேகிக்கப்படும் நபரின் மேலும் ஒரு புதிய புகைப்படம் மற்றும் வீடியோவைச் சமூக வலைத்தளத்தில் (X தளம் உட்பட) வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள் வேண்டுகோள்: “சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்று திருவள்ளூர் மாவட்டக் காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளியை விரைந்து கைது செய்யக் காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.