Rohit Sharma’s ODI Future: இந்திய ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் யார்..? பரிசீலிக்கும் பிசிசிஐ.. ரோஹித் விரைவில் ஓய்வா?
2027 ODI World Cup: ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 ஓய்வுக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. பிசிசிஐ சுப்மன் கில்லை டெஸ்ட் கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவை டி20 கேப்டனாகவும் நியமித்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் பெரும்பாலும் 3 வடிவத்திற்கும் ஒரே கேப்டன் முறையே இருந்தது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகும், ரோஹித் சர்மா (Rohit Sharma) ஓய்வுக்கு பிறகும் தற்போது மூன்று வடிவங்களிலும் இந்திய அணியில் வெவ்வேறு கேப்டன்கள் உள்ளனர். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிசிசிஐ (BCCI) புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்தது. இதன்மூலம், இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து சுப்மன் கில் (Shubman Gill) டெஸ்ட் கேப்டனாக தலைமை ஏற்பார். அதேநேரத்தில், டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக உள்ளார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோஹித் ஓய்வு பெறுவார் என்று பிசிசிஐயும், ரசிகர்களும் நினைத்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவிக்கவில்லை.
2027 ஒருநாள் உலகக் கோப்பை:
❌ Retired from T20Is
❌ Retired from Tests
✅ Only ODIs remainRohit Sharma is in the final act of a legendary career 🥺🇮🇳#TestCricket #ENGvIND #RohitSharma𓃵 pic.twitter.com/ROnn0XhFP9
— Sportskeeda (@Sportskeeda) May 7, 2025
2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் கொண்டு ஒருநாள் போட்டிகளுக்கு தேவையான அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். அதை தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையில், இந்திய அணி 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது. இருப்பினும், ரோஹித் சர்மா தனது ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறவில்லை. ஆனால், அதற்கு மாறாக ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.




2027 ஒருநாள் உலகக் கோப்பையின்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா 40 வயதை எட்டுவார். அதுவரை, ரோஹித் சர்மா இந்திய அணியில் உடற்தகுதி மற்றும் ஃபார்முடன் இருப்பாரா என்பது கேள்வியாக உள்ளது. இதற்கிடையில், புதிய ஒருநாள் கேப்டனை பிசிசிஐ பரிசீலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் அணியின் கேப்டன் யார்?
கிடைத்த தகவலின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை சுப்மன் கில்லுக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது நடந்தால், கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வடிவங்களிலும் அணியின் கேப்டனாக இருப்பார். இருப்பினும், சுப்மன் கில் எப்போது ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஷ்ரேயாஸ் ஐயரா அல்லது சுப்மன் கில்லா என்பதை பிசிசிஐதான் விரைவில் முடிவு செய்யும்.
ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததா?
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு 38 வயதான ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எதிர்பார்த்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ரோஹித்துக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே அவரது ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து எந்த விவாதமும் இல்லை, ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு அவர் ஒருநாள் போட்டியிலிருந்து விலகுவார் என எங்களில் பெரும்பாலோர் நினைத்தோம்” என்று தெரிவித்தார்.
ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை:
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக இதுவரை 273 போட்டிகளில் 265 இன்னிங்ஸ்களில் 11168 ரன்கள் எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்ச ரன் ஆகும். இது உலகின் எந்த ஒரு பேட்ஸ்மேனும் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.