AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BCCI New Rules: கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம்.. வெற்றி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா..? பிசிசிஐ முக்கிய ஆலோசனை!

Crowd Crush Deaths: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எதிர்கால ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஜூன் 14 அன்று நடைபெறும் பிசிசிஐ உச்சக் கவுன்சில் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI New Rules: கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம்.. வெற்றி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா..? பிசிசிஐ முக்கிய ஆலோசனை!
பிசிசிஐ - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jun 2025 19:46 PM IST

கடந்த 2025 ஜூன் 3ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனின் இறுதிப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது. இதனைதொடர்ந்து, 2025 ஜூன் 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி நிர்வாகம் ரசிகர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், ஐபிஎல் வெற்றிக்கு பிறகு கொண்டாட்டங்களுக்கான விதிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வருகின்ற 2025 ஜூன் 14ம் தேதி பிசிசிஐயின் 28வது உச்ச கவுன்சில் கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு:

கடந்த 2025 ஜூன் 4ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி உள்பட தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களை பார்க்க பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்திலும், அதை சுற்றியும் சுமார் 2.5 லட்சம் பேர் கூடியிருந்தனர். எதிர்பார்க்காதவகையில், லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் காவல்துறையினர், கிரிக்கெட் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து, அதிக அளவிலான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர்.

முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ, ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக ஆர்சிபி நிர்வாகத்தினர் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தினரை சேர்ந்த சிலர் பதவியை ராஜினாமா செய்தனர். ஐபிஎல் வெற்றிக்கு பிறகு, வெற்றி அணிவகுப்பு தொடர்பான விதிகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி தரப்பில் பிடிஐயிடம் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ உச்ச கவுன்சில் கூட்டம்:

ஐபிஎல் வெற்றி அணி வகுப்பு விதிமுறைகள் நிர்ணயத்தை தொடர்ந்து, 28வது பிசிசிஐ உச்ச கவுன்சில் கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்களும் விவாதிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, இந்தியாவிற்கும், நியூசிலாந்திற்கும் இடையிலான வரவிருக்கும் தொடரின் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்தும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 15 வயதுக்குட்ப்பட்ட சிறுமிகளுக்கான கிரிக்கெட்டில் வயது மோசடி பிரச்சனையை தடுக்க, தற்போது நடைபெற்று வரும் வயது சரிபார்ப்பு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களாக தெலுங்கானாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது 2025 ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வி.அகம் ராவ், மாவட்டத்தில் கிரிக்கெட்டுக்காக பெறப்பட்ட நிதி தவறாக ஒரு சிலர் பயன்படுத்தப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இது குறித்து நடவடிக்கை எடுத்து, பிசிசிஐ குறைதீர்ப்பாளரான நீதிபதி அருண் மிஸ்ரா, இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உச்ச கவுன்சிலைக் கேட்டுக்கொண்டார். அதன்படி, இந்த விஷயமும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

விவாதிக்கப்பட இருக்கும் மேலும் சில விஷயங்கள்:

வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிகள், பிசிசிஐ ஊழியர்களுக்கான போட்டி கொடுப்பனவு கொள்கை, 2025-26 உள்நாட்டு சீசனுக்கான தயாரிப்புகள் குறித்த அப்டேட், அம்பயர் மற்றும் பீல்டு அம்பயர் பயிற்சி தொடர்பான விஷயங்கள் ஆகியவை பற்றியும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

Follow Us