திருச்செந்தூரில் மகா கும்பாபிஷேகம் விழா: 76 ஓம குண்டங்களுடன் யாகசாலை அமைப்பு
Tiruchendur Temple Maha Kumbabhishekam 2025: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஜூலை 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 8000 சதுர அடி யாகசாலை 76 ஓம குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தங்க அலங்காரத்துடன் கூடிய யாகசாலை பூஜைகள் 2025 ஜூன் 30 முதல் தொடங்கி, கும்பாபிஷேகத்திற்குப் பின் சண்முகர் தங்க சப்பரத்தில் வீதியுலா வருவார்.

தூத்துக்குடி ஜூன் 30: திருச்செந்தூர் (Tiruchendur) சுப்பிரமணிய சுவாமி கோவிலில் (Subramania Swamy Temple) 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஜூலை 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் (Maha Kumbabhishekam on 2025 July 7th) நடைபெற உள்ளது. இதையொட்டி, 8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை முழுவதும் தங்க நிற அலங்காரத்துடன் சிறப்பு சித்திரங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. பஞ்ச ஆசன வேதிகை, நாகம், நந்தி, மயில், யானை போன்ற உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை யாக பூஜைகள் தொடங்கி, 12 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்படும். 2025 ஜூலை 7-ம் தேதி அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்று, சண்முகர் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார்.
ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேக விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாக திகழ்கிறது. இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளதால், சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டுவிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
8000 சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் யாகசாலை அமைப்பு
இந்த விழாவையொட்டி, மூலவர் சன்னதியிலும், வள்ளி-தெய்வானை அம்மன்களுக்கு உள்பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. மேலும், சண்முகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்காக கோவிலின் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த யாகசாலை அழகிய சித்திரங்களும், வண்ண ஒவியங்களும், அறுபடை வீடுகளின் சித்திரங்களுடன் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தூண்கள் மற்றும் சுவர்களில் தங்க நிற அட்டைகள் ஒட்டி பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.




யாகசாலையின் நடுவே 5 அடி உயர பஞ்ச ஆசன வேதிகை அமைப்பு
யாகசாலையின் நடுவே 5 அடி உயர பஞ்ச ஆசன வேதிகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆமை மீது ஐந்து தலை நாகம், முனிவர்கள், நந்தி, சிங்கம், தாமரைப்பூ போன்ற சிற்ப அலங்காரங்களும், யானை, மயில் போன்ற உருவங்களும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த யாகசாலை பூஜைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, மாலை முதல் 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். முக்கியமாக, ஜூலை 7-ஆம் தேதி அதிகாலை இறுதி யாகசாலை பூஜையுடன், காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
பக்தர்கள் திரளாக வந்து தரிசிக்க வாய்ப்பு
அதன்பின், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான விமான கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 9 மணிக்கு சண்முகர் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளி, அங்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வீதியுலா வரப்போகிறார். பக்தர்கள் திரளாக வந்து தரிசிக்க வாய்ப்பு ஏற்பட உள்ளது.