Sankatahara Chaturthi: சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருப்பது எப்படி?
Lord Vinayagar: சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகரின் அருளைப் பெற சிறந்த நாளாகும். இந்த விரதம் துன்பங்களை நீக்கி, வாழ்வில் இன்பத்தைத் தரும் என நம்பப்படுகிறது. அந்த புனித நாளில் காலையில் பக்தர்கள் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். மாலையில் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம் அல்லது வீட்டிலேயே வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் ஏராளமான வழிபாட்டு தெய்வங்கள் உள்ளது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் பல அவதாரங்கள், பெயர்கள் ஆகியவை உள்ளது. ஆனால் முழு முதற் கடவுளாக அறியப்படுபவர் விநாயகப் பெருமான் (Lord Vinayagar) ஆவார். யானை முகம், மனித உடல் ஒருங்கே பெற்ற இந்த கடவுள் பிள்ளையார், கணபதி, ஆனைமுகன் என பல பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். பொதுவாக நாம் எந்த ஒரு செயல் செய்தாலும் விநாயகரை வழிபடாமல் செய்வதில்லை. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி விரதம், சங்கடஹர சதுர்த்தி ஆகியவை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வருகிறது. இப்படியான நிலையில் நாம் இந்த தொகுப்பில் சங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றிப் பார்க்கலாம்.
சங்கடஹர சதுர்த்தி
பெயரை சொல்லும் போதே அதன் அர்த்தம் புரிந்திருக்கும். சங்கடங்களை தீர்க்கும் நாள் என சொல்லலாம். அதாவது இந்நாளில் நாம் விரதம் இருந்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், தடைகள் எல்லாம் நீங்கி இன்பமாய் விநாயகர் மாற்றுவார் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. சிவபெருமான் த்ரிபுராசுரர்களை வதம் செய்வதற்காக செல்லும்போது விநாயகரை வழிபட மறந்து விட்டார். இதனால் கோபம் கொண்ட விநாயகர் சிவன் சென்ற தேரின் சக்கரத்தை உடைய செய்தார். அப்போது தான் செய்த தவறை சிவபெருமான் ஞான திருஷ்டி மூலம் உணர்ந்து விநாயகரை வழிபட்டு அந்த போரில் வெற்றி பெற்றார் என புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
விரதம் இருக்கும் வழிமுறை
சங்கடஹர சதுர்த்தி அன்று காலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆடை அணிந்து பூஜையறையில் இருக்கும் விநாயகரின் புகைப்படம் அல்லது சிலையை தொட்டு வணங்கி வழிபாடு செய்து விரதத்தை தொடங்க வேண்டும். விரத காலத்தில் விநாயக்குரிய பக்தி பாடல்களை, துதிகளை தெரிந்தால் பாடலாம். தெரியாதவர்கள் செல்போன், டிவியில் ஒலிக்க விட்டு நம் மனதையும், சுற்றுப்புறத்தையும் தெய்வ அருளால் நிரப்ப வேண்டும்.




மாலையில் அருகில் இருக்கும் ஏதேனும் விநாயகர் கோயிலில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய வேண்டும். அப்போது பூஜைக்குரிய அபிஷேக பொருட்கள், பிரசாதம் ஆகியவை செய்து புண்ணியம் பெறலாம். அதன்பின்னர் இரவில் உதயமாகும் நிலவை சந்திர தரிசனம் செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொண்டு வழக்கம்போல பணிகளை செய்யலாம். ஒருவேளை கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் விநாயகர் முன் நைவேத்தியம் செய்து வழிபாடு மேற்கொள்ளலாம்.
உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு விரதம் மேற்கொள்ளலாம். ஒருவேளை விரத நேரத்தில் பசி அதிகமானால் பால், பழம் சாப்பிடலாம். அதில் தவறேதும் இல்லை. மனதை வருத்தி இறைவனுக்கு விரதம் இருக்கலாமே தவிர, உடலை வருத்தி இருக்க வேண்டாம் என ஆன்மிக அன்பர்கள் கூறியுள்ளனர்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)