Successful Life: வாழ்க்கையில் இந்த 5 பேரை நம்பாதீர்கள்.. முன்னேறவே முடியாதாம்!
கருட புராணத்தின் படி, வாழ்வில் வெற்றிபெற சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்புபவர்கள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், ஈகோ காட்டுபவர்கள், பயனற்ற அறிவுரை வழங்குபவர்கள் மற்றும் சோம்பேறிகள் ஆகியோரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். இவர்களின் தொடர்பு நம் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய த்ரில்லான ஒரு அனுபவம் என சொல்லலாம். சில விஷயங்களை நம்மால் கணிக்க முடியும். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நடக்கப்போவதை கணிக்க முடியாமல் நாம் வாழும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது என சொல்லலாம். இப்படியான வாழ்க்கையில் அனைவரும் பணம், செல்வம், இல்வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களில் நல்ல மாற்றம் இருக்க வேண்டும் எனவும், வளர்ச்சி என்பது சாத்தியமாக வேண்டும் எனவும் எண்ணமாக உள்ளது. இந்த விஷயங்கள் நிறைவேற நாம் சில விதிமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் சில நபர்களின் தொடர்பை நாம் வாழ்க்கையில் வைத்துக் கொள்ளக்கூடாது என 18 பெரிய புராணங்களில் ஒன்றான கருட புராணம் தெரிவிக்கின்றது. அதனைப் பற்றிக் காணலாம்.
வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய 5 நபர்கள்
- அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள்: நாமும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் அதிர்ஷ்டம் மீது நம்பிக்கை இருக்கும். சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்வார்கள். அவர்களிடமிருந்து வெகு தொலைவில் செல்ல வேண்டும். அப்படிப்பட்டவர்கள் எந்த வேலையும் செய்யாமல் உழைப்பின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க மாட்டார்கள். தான் கெட்டது மட்டுமின்றி மற்றவர்களையும் அதே வழியில் வாழ ஊக்குவிக்க முயற்சிப்பார்கள். இருப்பினும், வாழ்க்கையில் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பவர்களுக்கு நிச்சயமாக அதிர்ஷ்டம் கூட உதவாது என்பதே உண்மையாகும். கடினமாக உழைப்பதன் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை கூட மாற்ற முடியும். நேரத்தை வீணாக்குபவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருங்கள்.
- எதிர்மறை எண்ணம் உடையவர்கள்: வாழ்க்கை இன்பம், துன்பம் நிறைந்தது. ஆனால் பாசிட்டிவாக நினைக்க வேண்டும் என சொல்லி பழகுங்கள்.முடிந்தவரை எதிர்மறை மனநிலை கொண்டவர்களிடமிருந்து விலகி இருங்கள். எதிர்மறை எண்ணம் தோன்றுவது தவறில்லை.ஆனால் தனக்கு ஒரு விஷயத்தில் நடந்தது மற்றவர்களுக்கும் அப்படியே நடக்கும் என்பதில்லை. நாம் ஒரு விஷயத்தில் என்ன தவறிழைத்ததால் அது சரியாக செல்லவில்லை என்பதை கணித்து மற்றவர்கள் செய்யும் அதனை சரியாக செய்ய ஊக்குவிக்க வேண்டும். நம்மில் பலரும் வாழ்க்கையில் மிகவும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டுள்ளனர், அத்தகையவர்கள் எப்போதும் மற்றவர்களின் வெற்றிக்குத் தடையாக இருப்பார்கள் என்பது உண்மையாகும்.
- ஈகோ காட்டுபவர்கள்: ஈகோ மனித உணர்வுகளில் மிகவும் மோசமாக தாக்கத்தை உண்டாக்கக்கூடியது. பலரும் தங்கள் ஈகோவை சமயம் பார்த்து வெளிப்படுத்துவார்கள். அவர்களிடம் இருந்து விலகி இருங்கள். சிலர் எல்லாவற்றிலும் தங்கள் ஈகோவை காட்ட விரும்புகிறார்கள். மற்றவர்களை விட தங்களை சிறந்தவர்களாகக் காட்டும் ஆயுதமாக ஈகோ உள்ளது. அத்தகையவர்கள் தங்கள் ஈகோவைத் திருப்திப்படுத்த மற்றவர்களை காயப்படுத்தத் தயங்கவே மாட்டார்கள். அத்தகையவர்கள் தொடர்பை உடனே கைவிடுங்கள்.
- பயனற்ற அறிவுரை வழங்குபவர்கள்: நாம் ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாத போது மற்றவர்களின் தேவையை நாடுகிறோம். அல்லது ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளும்முன் மற்றவர்களிடம் கருத்து கேட்போம். இதில் சில பயனற்ற அறிவுரைகளை வழங்குவதை தங்கள் பழக்கமாக கொண்டுள்ளார்கள். இதனால் உங்கள் நேரத்தை வீணாகுவதைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் அப்படிப்பட்டவர்களால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. மற்றவர்கள் ஒரு விஷயம் செய்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களிடம் விலகி இருப்பது நல்லது. அத்தகையவர்களுடன் நட்பு கொள்வது என்பது மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பதாகும்.
- சோம்பேறிகள்: 5வதாக சோம்பேறிகளிடமிருந்து விலகி இருங்கள். சோம்பேறி வாழ்க்கை வாழ்பவர்களே தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்பாவார்கள். ஆனால் சோம்பேறி மனிதன் எப்போதும் தனது தோல்விகளுக்கு விதியையோ அல்லது வேறு யாரையோ குறை கூறுகிறான். அவன் தன் குறைபாடுகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை.அத்தகையவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும் என கருட புராணம் சொல்கிறது.
(கருட புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அடிப்படையில் இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)