வந்தே மாதரம்’ மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் – கனிமொழி எதிர்ப்பு
'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதை குற்றச் செயலாக மாற்றும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, 'வந்தே மாதரம்' பாடல் பாடப்படும்போது அதை அவமதிப்பது, அதற்கு இடையூறு விளைவிப்பது அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய செயல்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை குற்றச் செயலாக அறிவிக்கும் மசோதாவை நாடாளுமன்றம் ஜூலை 29, 2026 நேற்று நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 30, 2026 இன்று மக்களவையில் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு மசோதா, 2026’ என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா, ஒரு நாளுக்கு முன்பே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தத் திருத்தம் இப்போது சட்டமாக மாறும் நிலையில் உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்திய சூழலில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அவையின் அலுவல் நடவடிக்கைகள் தொடர்ந்தபோதும் இந்த அமளி நீடித்தது.
வந்தே மாதரம் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971′-ஐத் திருத்துவதன் மூலம், தேசிய கீதமான ‘வந்தே மாதரம் அச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவருவதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, அரசியலமைப்பு, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற தேசியச் சின்னங்களை அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது. சட்டம் நடைமுறைக்கு வந்ததும், ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படும்போது அவமதிப்பு, இடையூறு அல்லது குழப்பம் விளைவிக்கும் செயல்களுக்கும் அதே தண்டனை வழங்கப்படும். அதாவது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.




இதையும் படிக்க : தேர்வுத் தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம்.. ஆண்டி பேப்பர் லீக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..
கனிமொழி எதிர்ப்பு
மாநிலப் பாடலை வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை நீங்கள் அவமதிப்பதாக உள்ளதாகவும், நாட்டை பிளவு படுத்துவதாக உள்ளதகாவும் கனிமொழி எம்பி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தேச உணர்வை மக்களிடம் திணிக்க முடியாது. வந்தே மாதரம் கட்டாயம் என்ற மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது விவாதமின்றி வந்தே மாதரம் மசோதா நிறைவேறக்கூடாது. கருத்து சொல்வோரை தேசத்துரோகிகள் என்கிறீர்கள். வந்தே மாதரம் பாடாவிட்டால் தேசத்துரோகிகளா? பாஜகதான் தேசத்துக்கு எதிரானது என்று பேசினார்.
‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடல் 1875 ஆம் ஆணடு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு, 1882-இல் அவரது ஆனந்த மத் நாவலில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. கடந்த சில மாதங்களாக, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின்போது தேசியப் பாடலைப் பாடுவது குறித்து மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இதையும் படிக்க : “ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே!”.. செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, ஜூலை 29 அன்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதத்தின்போது காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.