“ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே!”.. செலவினத்தைக் குறைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
One Officer One Official Car Policy: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசு வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் "ஒரு அதிகாரிக்கு ஒரு அதிகாரப்பூர்வ வாகனம் மட்டுமே" என்ற புதிய கொள்கையை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி, ஜூலை 29: மத்திய அரசுத் துறைகளில் நிலவும் தேவையற்ற செலவினங்களை முற்றிலுமாகத் தவிர்த்து, நிதி ஒழுக்கத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, “ஒரு அதிகாரிக்கு ஒரே ஒரு அதிகாரப்பூர்வ கார்” (One Officer One Official Car) என்ற கொள்கை மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் உடனடியாகச் அமலுக்கு கொண்டுவரப்படுகிறது.
இதையும் படிக்க: மாணவர்கள் மீது தடியடியா?.. டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.. தலைமை நீதிபதி அதிரடி!!
முறைகேடுகளுக்குக் கடிவாளம்:
மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரிகள், தாங்கள் வகிக்கும் முதன்மைப் பதவிக்கு ஒரு வாகனம், கூடுதலாகக் கவனிக்கும் துறைகள் அல்லது குழுக்களுக்கு என தனித்தனி வாகனங்கள் எனப் பல அதிகாரப்பூர்வ கார்களைத் தங்களின் வசதிக்கு ஏற்பப் பயன்படுத்தி வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அரசுத் துறைகளின் கார்கள் மட்டுமின்றி, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஆடம்பர வாகனங்களையும் சொந்தப் பயன்பாட்டிற்கும், குடும்பத்தினரின் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.
இதனால் எரிபொருள் செலவு, வாகனப் பராமரிப்பு, ஓட்டுநர் ஊதியம் என அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கில் தேவையற்ற நிதி இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டே இத்தகைய கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய விதிமுறைகள் & கட்டுப்பாடுகள்:
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு, பல துறை நிர்வாகம் என எதுவாக இருந்தாலும், ஒரு அதிகாரிக்குச் சட்டப்பூர்வமாக ஒரே ஒரு அரசு வாகனம் மட்டுமே ஒதுக்கப்படும். ஒரு அதிகாரி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சகங்கள்/துறைகளின் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அவருக்கு ஏற்கெனவே ஒரு கார் ஒதுக்கப்பட்டிருந்தால், இரண்டாவது கார் பெற அவருக்கு முற்றிலும் தகுதியில்லை.
பொதுத்துறை நிறுவன வாகனங்களுக்குத் தடை:
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை, அரசுத் துறை அதிகாரிகள் தங்களின் சொந்த அலுவல் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. ஒதுக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் நூறு சதவீதம் அரசுப் பணி மற்றும் அலுவல் ரீதியான பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட முறையிலோ அல்லது குடும்பத்தினருக்கோ பயன்படுத்துவது விதிமீறலாகக் கருதப்படும்.
இதையும் படிக்க: ஏசி ரயில் பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த பயணி.. பாதுகாப்பு குறித்து சர்ச்சை
நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை:
இப்புதிய கொள்கையின் மூலம் மத்திய அரசுத் துறைகளின் வருடாந்திர செலவினங்களில் பெரும் பகுதி சேமிக்கப்படும் என்றும், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில் நிதி ஒழுக்கமும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை அனைத்து மத்திய அமைச்சகங்களும், துறைத் தலைவர்களும் எவ்வித விலக்குமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.