Sonia Gandhi : சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி – விவரம் இதோ
Sonia Gandhi Health Update : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுமுறையை கழிக்க சிம்லாவிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

புதுடெல்லி, ஜுன் 07: காங்கிரஸ் (Congress) தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) உடல் நலக்குறைவால் ஜுன் 7, 2025 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இமாச்சலப் பிரதேசத்தின் (Himachal Pradesh) சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு சோனியா காந்தி சரியாக இரவு 7 மணிக்குத் திரும்பினார். சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த பிப்ரவரி, 2025 மாதம் சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் காரணமாக அவரது உடல்நிலை பாதிப்படைந்தது.
இதனையடுத்து பிப்ரவரி 21, 2025 அன்று அவர் தனது நோய் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த டிசம்பரில் சோனியா காந்தி தனது 78 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவர் கடைசியாக மே 27, 2025 அன்று நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
#WATCH | Himachal Pradesh | Congress Parliamentary Party chairperson Sonia Gandhi leaves from Indira Gandhi Medical College & Hospital in Shimla after her medical examination. She had come here for a routine health check-up due to some minor health issues. pic.twitter.com/OByP3Z8OEA
— ANI (@ANI) June 7, 2025
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது விடுமுறையைக் கழிக்க கடந்த ஜுன் 2, 2025, திங்கட்கிழமை சிம்லா வந்திருந்தார். அவர் தனது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் ஐஜிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு இசிஜி, எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகளைச் செய்துள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மை ஆலோசகர் நரேஷ் சவுகான் கூறுகையில், சோனியா காந்தி சிறிய உடல்நலப் பிரச்னைகள் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நலமாக உள்ளதாக கூறினர். இதனையடுத்து அவர் வீடு திரும்பினார் என்றார். இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச தலைமைச் செயலாளர் பிரபோத் சக்சேனா, ஐ.ஜி.எம்.சி.க்கு நேரில் சென்று சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு சோனியா காந்தி டெல்லி திரும்பி அரசியல் நடவடிக்கைகளில் வழக்கம் போல ஈடுபடவுள்ளார்.