“வினாத்தாள் கசிவு சாதாரண விஷயமல்ல!”.. நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!
PM Modi video on NEET paper leak: நீட் வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வேதனையளிப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, குற்றவாளிகளைத் தண்டிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஜூலை 24: நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, வினாத்தாள் கசிவைத் தடுக்க இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தேர்வுத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
இன்றைய கேபினட் கூட்டத்தில் புதிய மசோதா:
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
இதனிடையே, நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்த வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, “வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயமல்ல. அது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்துள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் மாணவர்களின் ஒரு கல்வி ஆண்டு வீணாகிவிடக் கூடாது என்பதால் விரைவாகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், இத்துடன் நாம் அமைதியாகிவிட முடியாது. விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அவர்கள் நள்ளிரவில் சட்ட வரைவைத் தயார் செய்து என்னிடம் வழங்கியுள்ளனர். இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற அமர்வில் இந்த மசோதாவை நிறைவேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தாக்குதல்:
பிரதமரின் இந்த வீடியோ பதிவிற்குப் பதிலடி கொடுத்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததே இந்த அரசுதான். கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை இந்த விவகாரத்தை விடமாட்டோம்; தெருவிலும் நாடாளுமன்றத்திலும் மாணவர்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தொடரும் போராட்டம்:
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை பிரதானக் கோரிக்கையாக முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பினர் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பதற்றம் நிலவியது. நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தவும் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தனி விரைவு நீதிமன்றம் அமைப்பு:
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை (ஜூலை 23) நாட்டின் இளைஞர்களுக்கு முக்கியமான செய்தியை வெளியிட்டார். அதில், “நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவுமில்லை” என கூறியிருந்த பிரதமர் மோடி, தேர்வுத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்வுத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே, டெல்லி உயர் நீதிமன்றம் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு வழக்குகளை உடனடியாக விசாரிப்பதற்காகத் தனி விரைவு நீதிமன்றத்தை அமைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதையும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
சிறப்பு நீதிபதி நியமனம்:
இந்தத் தனி நீதிமன்றத்தின் சிறப்பு சிபிஐ நீதிபதியாக அணு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம் 2024-ன் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் உடனடியாக இந்த விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.