‘140 கோடி மக்களின் நம்பிக்கை’ விண்வெளி பயணத்தை துவங்கிய சுபான்ஷு சுக்லா.. வாழ்த்திய பிரதமர் மோடி!
AXIOM 4 Mission Astronaut shubhanshu shukla : விண்வெளி பயணத்தை தொடங்கிய இந்திய வீரர் சுபாஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், விண்வெளி பயணத்தை தொடங்கியபோது சுபாஷு சுக்லா முக்கிய மெசேஜை பகிர்ந்துள்ளார்.

டெல்லி, ஜூன் 25 : இந்திய விண்வெளி வீரர் சுபாஷு சுக்லாவுக்கு (Shubhanshu Shukla) பிரதமர் மோடி (PM Modi) உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் ஆக்சியம் 4 மிஷன் (Axiom 4 Mission) செயல்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளோரிடாவில் இருக்கக்கூடிய கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஆக்சியம் 4 மிஷன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது விண்வெளி பயணத்தை தொடங்கி இருக்கிறார். 2025 ஜூன் 25ஆம் தேதி இன்று மதியம் 12.01 மணியளவில் தனது விண்வெளி பயணத்தை சுபாஷு சுக்லா தொடங்கி இருக்கிறார். இதன் மூலம், விண்வெளிக்கு இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட இந்த திட்டம், 2025 ஜூன் 25ஆம் தேதி திட்டமிடப்படி விண்ணில் செலுத்தப்பட்டது. சுபாஷு சுக்லாவுடன் போலந்தின் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் அமெரிக்காவின் கமாண்டர் பெக்கி விட்சன் ஆகியோர் சென்றுள்ளனர்.
சுபாஷு சுக்லாவின் முதல் மெசேஜ்
அவர்கள் 2025 ஜூன் 26ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் விண்வெளி நிலையத்தை அடைவார்கள். அவர்கள் 14 நாட்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையே ராக்கெட் விண்ணில் பாய்ந்தவுடன் சுபாஷு சுக்லா முதலில் கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளது.




அவர் கூறுகையில், “வணக்கம் என் அன்பான நாட்டு மக்களே, 41 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துவிட்டோம். இந்த நேரத்தில் நாம் மணிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோளில் மூவர்ணக் கொடி உள்ளது, அது நான் தனியாக இல்லை, நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறீர்கள் என்று சொல்கிறது.
இது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) எனது பயணத்தின் தொடக்கமல்ல, இது இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டத்தின் தொடக்கமாகும். இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் மனது பெருமையால் நிரம்பி வழிய வேண்டும். இந்தியாவின் மனிதர்கள் விண்வெளிக்கும் அனுப்பும் திட்டத்தை ஒன்றாக தொடங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்” என தெரிவித்தார்.
பிரதமர் மோடி வாழ்த்து
We welcome the successful launch of the Space Mission carrying astronauts from India, Hungary, Poland and the US.
The Indian Astronaut, Group Captain Shubhanshu Shukla is on the way to become the first Indian to go to International Space Station. He carries with him the wishes,…
— Narendra Modi (@narendramodi) June 25, 2025
இந்திய விண்வெளி வீரர் சுபாஷு சுக்லா குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்திய விண்வெளி வீரர், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற உள்ளார். அவர் 1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள, அபிலாஷைகளை சுமந்து செல்கிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “சுபான்ஷு சுக்லா இந்தியாவிற்கு விண்வெளியில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கிறார். நட்சத்திரங்களை நோக்கிய ஒரு இந்தியரின் பயணத்தில் முழு தேசமும் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. சுபாஷு சுக்லாவுடன் பயணம் செய்யும் அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த வீரர்கள் மூலம் உலகம் உண்மையில் ஒரு குடும்பதை என்பதை நிரூபிக்கிறார்கள்” என குறிப்பிட்டு இருந்தார்.