பாதி மொட்டை அடிக்கப்பட்டு, கால்நடைகளை போல் நடத்தப்பட்ட தலித் ஆண்கள்.. மாடு கடத்தல் குற்றச்சாட்டில் ஊர்மக்கள் அத்துமீறல்!
Odisha Dalit Men Brutally Assaulted | ஒடிசாவில் மாடு கடத்தியதாக குற்றம் சாட்டி இரண்டு தலித் ஆண்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கால்நடைகளை போல நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா, ஜூன் 24 : ஒடிசாவின் (Odisha) கஞ்சம் (Ganjam) மாவட்டத்தில் மாடு கடத்திய குற்றச்சாட்டில் (Cattle Smuggling Suspicion) இரண்டு தலித் ஆண்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டு, தவழ்ந்து செல்ல வைக்கப்பட்டு, புற்களை சாப்பிட வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டு ஆண்களை மாடு கடத்தியதாக குற்றம்சாட்டி அந்த பகுதி மக்கள் இவ்வாறு செய்துள்ளதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாடு கடத்தியதாக குற்றச்சாட்டு – மிகவும் மோசமாக நடத்தப்பட்ட தலித் சமூக ஆண்கள்
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கரிகும்மா கிராமத்தில் பாபு நாயக் மற்றும் பாலு நாயக் ஆகிய இருவர் கால்நடைகளை தங்களது வாகனங்களில் ஏற்றி தங்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் பணியில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிலர், அவர்களை கால்நடை கடத்தும் நபர்கள் என குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி, அவர்களிடம் இருந்து ரூ.30,000 பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அவர்கள் பணத்தை தர மறுக்கவே, அவர்கள் இருவரும் மிக கடுமையாக தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.




மொட்டை அடித்து, தவழ்ந்து செல்ல வைக்கப்பட்ட தலித் ஆண்கள்
HORROR FROM ODISHA
Two dalit men were beaten by Bajrang dal members in Odisha on charges of cow smuggling .
They were forced to walk on their knees, eat grass, and drink drain water . After BJP came to power in Odisha these things are happening frequently . pic.twitter.com/zXqNoXEqMF
— Surbhi (@SurrbhiM) June 23, 2025
அந்த இரண்டு தலித் சமூக ஆண்களிடம் பணம் கேட்டு மிரட்டிய அந்த கும்பல், அவர்களை சலூன் கடைக்கு அழைத்துச் சென்று தலையை பாதி மொட்டை அடித்துள்ளனர். பிறகு அவர்கள் அந்த இரண்டு ஆண்களையும் முட்டி போட்டு தவழ வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி, அவர்கள் தவழ்ந்து சென்று புற்கள் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்துச் சென்ற அந்த நபர்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்று காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மொட்டை அடித்து சித்ரவதை செய்த 6 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.