2 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. சந்தேகத்தில் வெறிச் செயல்!
Man Killed His Pregnant Wife In Haryana | ஹரியானாவில் தனது இரண்டு மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொடூரமாக கொலை செதுள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அந்த நபர் திட்டமிட்டு மனைவியை காரில் அழைத்துச் சென்று இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.
ஜஜ்ஜர், பிப்ரவரி 18 : ஹரியானாவில் (Haryana) கணவனே இரண்டு மாத கர்ப்பிணியான மனைவியை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அந்த நபர் திட்டமிட்டு இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பிணி மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன்
ஹரியானா மாநிலம், ஜஜ்ஜர் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சுல். இவருக்கு 2025 ஆம் ஆண்டு மேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணம் நடைபெற்று நான்கு மாதங்கள் ஆன நிலையில், மேகா இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் காரில் சென்றுக்கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத ஒரு நபர் காரை வழிமறித்து, அவர்களை தாக்கிவிட்டு காரை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், இந்த சம்பவத்தில் அந்த பெண் உயிரிழந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : போட்டோஷூட்டில் பிஸியான கர்ப்பிணி தாய்.. தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியான 3 வயது குழந்தை..




அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றதாக அன்சுல் கூறியுள்ளார். இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே மேகாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அன்சுலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
திட்டமிட்டு கொலையை அரங்கேற்றிய கணவர்
அன்சுல் தனது மனைவியை அவரது தாய் வீட்டில் இருந்து குருகிராமுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் முன்கூட்டியே தனது மனைவியை கொலை செய்வதற்காக கத்தரிக்கோளை உடன் எடுத்துச் சென்றுள்ளார். பிறகு மேகாவின் கிராமத்தின் அருகே காரை நிறுத்திய அவர் முதலில் மேகாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் தான் கொண்டுச் சென்ற கத்தரிக்கோளால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். பிறகு யாரோ கொலை செய்துவிட்டது போல காவல்துறையிடம் நாடகமாடியுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர் இந்த கொடூரத்தை செய்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : வாடிக்கையாளரின் 2 கிலோ தங்கத்தை திருடி விற்பனை செய்த மேலாளர்.. அதிர்ச்சி சம்பவம்!
அன்சுல் தனது மனைவியை கொலை செய்வதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னதாக அவருடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.