போட்டோஷூட்டில் பிஸியான கர்ப்பிணி தாய்.. தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியான 3 வயது குழந்தை..
Joy turns to tragedy: குழந்தை தண்ணீரில் விழுந்து தத்தளித்தது தெரியாமல், ஸ்வாதி போட்டோ ஷூட் எடுப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். போட்டோ ஷூட்டை முடித்துவிட்டு தனது குழந்தையை காணவில்லை என்று ஸ்வாதி தேடியுள்ளார். அப்போது தான் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது.
பெங்களூரு, பிப்ரவரி 16: பெங்களூரு அருகே நிகழ்ந்த மனதை உருக்கும் சம்பவம், ஒரு குடும்பத்தின் சந்தோஷ தருணத்தை நொடியில் சோகமாக மாற்றியிருக்கிறது. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த இந்த துயரச் சம்பவம், பெற்றோரின் கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்த முடியும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. குறிப்பாக, 8 மாத கர்ப்பிணியாக இருந்த தாய் மகிழ்ச்சியான நினைவுகளை பதிவு செய்ய ‘போட்டோ ஷூட்’ எடுத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது என்பதால், இந்த சம்பவம் மேலும் இதயத்தை நொறுக்கும் வகையில் அமைந்துள்ளது. குடும்பமே புதிய உறுப்பினரை வரவேற்கத் தயாராக இருந்த நேரத்தில், அவர்களின் முதல் குழந்தையை இழந்தது மிகப்பெரிய இழப்பாக மாறி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகள் சிறை.. நிரபராதி என கூறி விடுதலை.. அடுத்த நாளே உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?
8 மாத கர்ப்பிணியின் மகிழ்ச்சி தருணம்:
பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருபவர் சரண்ராஜ். இவரது மனைவி ஸ்வாதி. இந்த தம்பதிக்கு 3 வயதில் லட்சியவேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், ஸ்வாதி 2வது முறையாக கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். சரண்ராஜ் தொழிலதிபர் ஆவார். அவர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் ‘போட்டோ ஷூட்’ எடுக்க ஸ்வாதி முடிவு செய்தார்.இதற்கு சரண்ராஜும் சம்மதம் தெரிவித்தார்.
வளைத்து வளைத்து போட்டோ எடுத்த தோழி:
இதையடுத்து, தனது தோழியுடன் ‘போட்டோ ஷூட்’ எடுக்க பெங்களூரு புறநகர் மாவட்டம் மாகடி தாலுகாவிற்கு அருகே உள்ள கட்டமனஹள்ளிக்கு தனது 3 வயது குழந்தையுடன் ஸ்வாதி வந்தார். கட்டமனஹள்ளியில் உள்ள புல்வெளியில் வைத்து ஸ்வாதியை, அவரது தோழி பல்வேறு கோணத்தில் போட்டோ எடுத்துபடி இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரை மட்டத்திலான தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது.
தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை பலி:
தொடர்ந்து, தொட்டிக்குள் விழுத்த குழந்தை அலறியுள்ளது. எனினும், குழந்தை தண்ணீரில் விழுந்து தத்தளித்தது தெரியாமல், ஸ்வாதி போட்டோ ஷூட் எடுப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். போட்டோ ஷூட்டை முடித்துவிட்டு தனது குழந்தையை காணவில்லை என்று ஸ்வாதி தேடியுள்ளார். அப்போது தான் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் குழந்தையை தொட்டியில் இருந்து மீட்டபோதும், சிறுவன் ஏற்கெனவே, இறந்துவிட்டதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையும் படிங்க: மும்பை ரயிலில் பர்தா அணிந்து பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை மேற்கொண்டனர். இதில், விளையாடிய குழந்தையை கவனிக்காமல் போட்டோ ஷூட்டில் ஸ்வாதி கவனம் செலுத்தியதால், தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து பலியானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.