இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. ஜூலை 17ஆம் தேதி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. சிறப்புகள் என்ன?
india's First Hydrogen Train: இந்த ஹைட்ரஜன் ரயிலில் 1,200 கிலோவாட் திறன் கொண்ட எரிபொருள் செல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், ரயிலில் இருந்து வெளியேறும் கழிவாக நீராவி மட்டுமே வெளியேறும் என்பதால், கார்பன் உமிழ்வு குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15, 2026: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17-ஆம் தேதி ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் இருந்து தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பசுமை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ரயில் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஜிந்த் ரயில் நிலையத்தையும், புதிய மருத்துவக் கல்லூரியையும் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், குருக்ஷேத்திராவில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட ரயில் பாதை மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், அங்கு அமைக்கப்படவுள்ள சீக்கிய அருங்காட்சியகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
அதேபோல், அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் அம்பாலா ரயில்வே கோட்டத்தில் உள்ள மொஹாலி, அம்ப் அண்டௌரா, ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் கல்கா ஆகிய நான்கு ரயில் நிலையங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், பின்னர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கும் பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, 2026 மே மாதத்தில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் 10 பெட்டிகள் கொண்ட டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த ரயில், டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்தி இழுவை ஆற்றலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?
இந்த ஹைட்ரஜன் ரயிலில் 1,200 கிலோவாட் திறன் கொண்ட எரிபொருள் செல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், ரயிலில் இருந்து வெளியேறும் கழிவாக நீராவி மட்டுமே வெளியேறும் என்பதால், கார்பன் உமிழ்வு குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 கிலோமீட்டர் தொலைவுள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள இந்த ரயில், தினமும் 2,600-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சார்பில் ரூ.89 கோடி செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிந்தில் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் மற்றும் அதிநவீன எரிபொருள் நிரப்பும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மூன்றாவது மொழி பாடத்தில் தேர்ச்சி கட்டாயம் – சிபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு
இந்த ரயிலில் 27 ஹைட்ரஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருமுறை ஹைட்ரஜன் நிரப்பினால் சுமார் 250 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கக்கூடிய இந்த ரயில், தினசரி சுற்றுப்பயணங்களின் மூலம் மொத்தம் 356 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் ரயில் குறித்து பிரதமர் மோடி:
View this post on Instagram
`
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் ஹரியானாவில் இருந்து தனது பயணத்தை தொடங்கத் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறுகையில், இந்த திட்டம் ‘விக்சித் பாரத்’ மற்றும் ‘கிரீன் இந்தியா’ என்ற இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகும் என்றும், தூய்மையான எரிசக்தி அடிப்படையிலான போக்குவரத்துக்கு இந்தியா முன்னேறி வருவதற்கான முக்கிய அடையாளமாக இது திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தால் தயாரான ரயில்:
மேலும், இந்த ரயில் முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டதாகவும், இது ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டங்களின் குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்றும் அவர் கூறினார்.
இரண்டு இயக்க சக்தி பெட்டிகள் மற்றும் எட்டு பயணிகள் பெட்டிகள் என மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில், இந்தியாவின் அகல ரயில் பாதையில் இயக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தேசிய தலைநகர் பிராந்தியத்துடன் (NCR) ஹரியானாவின் இணைப்பு மேலும் மேம்பட்டு, தொழில், சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என்றும் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.