தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டி.. மனசாட்சி இல்லாமல் குப்பையில் வீசிய பேரன்!
Elderly Woman Found in Mumbai Trash | மும்பையில் உள்ள அரே காலனியில் 60 வயது மூதாட்டி ஒருவர் குப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். தான் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது பேரன் தன்னை குப்பையில் வீசி சென்றதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை, ஜூன் 24 : மும்பையில் (Mumbai) வயதான பெண் ஒருவர் குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது பேரன் இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வயதான பெண்ணை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்ற குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பேரனே, பாட்டியை குப்பை தொட்டியில் வீசி சென்ற இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குப்பையில் இருந்து மீட்கப்பட்ட வயதான பெண்
ஜூன் 21, 2025 அன்று மும்பையில் உள்ள ஆரே காலனியில் உள்ள குப்பை தொட்டிக்கு அருகே உள்ள சாலையில், குப்பைகளுக்கு மத்தியில் 60 வயது மதிக்கத்தக்க யசோதா என்ற பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த நிலையில் அது குறித்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது பேரன் தான் தன்னை அந்த இடத்தில் போட்டுவிட்டு சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அவர் உடல்நல குறைவுடன் இருந்த நிலையில், போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவரை மருத்துவமனையில் அனுமதித்த சில மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக காலை மீட்கப்பட்ட மூதாட்டி மாலையில் கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




குடும்பத்தை தேடி வரும் போலீஸ்
தனது குடும்பம் குறித்த தகவல்களை தெரிந்த்துக்கொள்வது குறித்து போலீசார் அவரிடம் கேட்ட நிலையில், அவர் இரண்டு வீட்டு முகவரிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யசோதாவின் புகைப்படத்தை மற்ற காவல் நிலையங்களுக்கு பகிர்ந்து உறவினர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாட்டியை தவிக்க விட்ட பேரன்
யசோதை தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரது பேரன் அவரை குப்பையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.