டெல்லியில் ஏஐ வசதிகளுடன் கூடிய தேசிய நெடுஞ்சாலை – 14 வகையான போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும்
India’s First Smart Highway : டெல்லி - குருகிராமை இணைக்கும் துவாரகா விரைவுச் சாலையில், ஏஐயால் (AI) கட்டுப்படுத்தப்படும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் முதல் டிஜிட்டல் நெடுஞ்சாலை என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்கள் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகளின் (National Highways) வடிவம் காலத்துக்கு ஏற்ப மாறி வருகிறது. வாகன ஓட்டிகள் சுதந்திரமாக பயணிக்க அகலமான சாலைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், இவை ஸ்மார்ட் நெடுஞ்சாலைகளாகப் புதிய வடிவத்தைப் பெறப் போகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி (Delhi) – குருகிராமை இணைக்கும் துவாரகா விரைவுச் சாலையில், ஏஐயால் (AI) கட்டுப்படுத்தப்படும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு விபத்துகள் நடந்தால உடனடியாக கண்டறிய உதவும். விரைவில் இந்த வசதி நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ வசதிகளுடன் இயங்கும் ஸ்மார்ட் ஹைவே
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. துவாரகா விரைவுச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்துக்கு ஏஐ வசதிகளுடன் கூடி ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மொத்தம் 56.46 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தச் சாலை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நாட்டின் முதல் டிஜிட்டல் நெடுஞ்சாலையாக மாறியுள்ளது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் விபத்து கண்டறிதல் ஆகும். டிஜிட்டல் நெடுஞ்சாலையில் இயங்கும் இந்த ஏஐ அடிப்படையிலான ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.
14 வகையான போக்குவரத்து விதிமீறல் களைகண்டறியும்
நீங்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால், கேமராவின் மூலம் கண்டுபிடிக்கப்படும். பைக்கில் 3 பேர் அமர்ந்து செல்லுதல், அதிவேகம் போன்ற 14 வகையான போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியும். விதிமீறல் நடந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று என்ற அளவில், நெடுஞ்சாலையில் 110 உயர் தெளிவுத்திறன் கொண்ட பிடிஎஸ் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு இருக்கும். இதில் 5 வகையான அமைப்புகள் உள்ளன. போக்குவரத்து கண்காணிப்பு, விபத்து வீடியோ பதிவு, வாகனங்களின் வேகத்தை கண்டறிதல், அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒரு மைய கட்டுப்பாட்டு அறை ஆகியவை வழங்கப்படும்.
இந்த அமைப்பு டிஜிட்டல் மூளையாக செயல்படுகிறது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அது உடனடியாக உள்ளூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்களுக்குத் தெரிவிக்கும். அடர்ந்த மூடுபனி உருவாகும்போதும், சாலையில் தடைகள் ஏற்படும்போதும், விலங்குகள் சாலைகளுக்குள் நுழையும்போதும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. துவாரகா விரைவுச் சாலையில் செயல்படுத்தப்படும் இந்த தானியங்கி முறையை, நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது நடந்தால், நமது தேசிய நெடுஞ்சாலைகள் இன்னும் நவீனமாக மாறும்.