தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம்
Petrol Diesel price : 5 மாநில சட்டமன்ற தேர்தல் இன்றுடன் முடியும் நிலையில், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என தகவல் பரவிய நிலையில் அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை விளக்கமளித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் இன்றுடன் முடியும் நிலையில், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும் என தகவல் பரவிய நிலையில் அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை விளக்கமளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29, 2026 அன்றுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் அதனை மத்திய பெட்ரோலியத்துறை மறுத்துள்ளது.
தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா?
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு, ஏப்ரல் 29, 2026 ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயரும் என்று குறிப்பிட்டிரந்தார். மேலும் சமாஜ்வாதி கட்சியி் தலைவர் அகிலேஷ் யாதவ், 5 மாநில தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார்.
இதையும் படிக்க : வெளியானது நீட் தேர்வு ஹால் டிக்கெட்.. மே 3- இல் தேர்வு – ரிசல்ட் எப்போது தெரியுமா?




இந்த நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். எல்பிஜி, பெட்ரோலியம் மற்றும் டீசல் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கின்றன, விலைகளும் உயரவில்லை, எனவே பீதியடைய வேண்டாம். எண்ணெய் தட்டுப்பாடு என மக்கள் பீதியுடன் பல இடங்களில் எரிபொருள் வாங்குவதைப் பார்ப்பதாகவும், எண்ணெய் பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : கோடை விடுமுறை – 18, 262 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – ரயில்வே அதிரடி
இதற்கிடையில் சென்னையில் ஏப்ரல் 29, 2026 புதன்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84க்கும். டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ91.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் விளக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.